Saturday, October 29, 2011

மூட்டு வலிகளைக் குணமாக்க பத்தியங்கள் உதவுமா?



மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா?

வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை.


இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.

மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.

அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்
  • நிச்சயமாக இல்லை. 
  • ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சமச்சீரான உணவு உதவும்

எவ்வாறான உணவுமுறை உதவும்

  • சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
  • எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
  • எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
  • தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
  • கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?

'மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?

  • அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே' என்று பலர் கேட்பார்கள். 
  • வேறு சிலர் 'தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.  
இவை தவறான நம்பிக்கைகள். உண்மை கிடையாது. மாறாக இவற்றில் பல நல்ல போசாக்குப் பொருட்கள் உள்ளன. எனவே அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு சில நோய்களில்

கவுட் (Gout)
ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.
இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.

இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.


ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

தவறான கருத்து

உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.
  • தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள். 
  • உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள். 
  • நீங்களாக நிறுத்த வேண்டாம்.

ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).
  • குறிஞ்சா இலை, 
  • முடக்கொத்தான் 
எனப் பல பயன்படுகின்றனவே என்கிறீர்களா.

இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?
 

இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.

வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்


எனவே
  • குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம். 
  • சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்தால் மூட்டு நோய்களோடு வாழ்தல்  சிரமமானது அல்ல


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

தினக்குரலின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதியது.



Post Comment

Saturday, October 22, 2011

விமர்சனங்களை எதிர்கொள்வது நாளாந்த வாழ்விலும் படைப்புலகிலும்



உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். 'அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.' அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. "எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?" என கிளர்ந்தெழுகிறிர்கள்.

எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே 'நீ இப்படிச் செய்து போட்டியே' எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது.....
மல்லுக்கட்டல்தான்

பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக 'இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்' என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.
மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் .....

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.


இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு
  • படைப்பாளியாக இருக்கலாம், 
  • ஒவியனாகவோ, 
  • பாடகனாகவோ அல்லது 
  • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம். 
படைப்புலகம் சாராது
  • ஆசிரியனாகவோ, 
  • தொழிலதிபராகவோ, அல்லது 
  • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம். 
விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.


நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.
  • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள். 
  • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன. 
  • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. 
  • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

இழப்பும் கிடைப்பும்

இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

மாறாக பொதுமையானதாகக் கருதும்போது
  • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும். 
  • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும். 
  • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும். 
 

விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.
  • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது. 
  • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான். 
  • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா? 
இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம். 
  • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள். 
  • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.
 2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.
  • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள். 
  • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள். 
  • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம். 
வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
  •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். 
             நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்   
  • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம். 
 இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.
  1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும். 
  2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும். 
இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.
ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக .........

இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை
0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, October 15, 2011

கண்ணருகே தோலில் தடிப்புகள் கொலஸ்டரோலா?



கொலஸ்டரோல் உங்களுக்கு இருக்கிறதா என அறிவது எப்படி? 12-14 மணிநேரம் வெறும் வயிற்றிலிருந்து இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என விடயம் அறிந்தவர்கள் கூறுவார்கள்.

ஆனால் உங்களுக்கு இருக்கக் கூடும் என்பதைக் காட்டும் வேறு அறிகுறிகள் உள்ளனவா?

சன்தலஸ்மா

கண் இமைகளின் மேல் மடல் அல்லது கீழ் மடலில் அல்லது அவற்றருகே மஞ்சள் நிறத்தில் தோற் தடிப்புகள் சிலரில் தென்படுவதுண்டு. சன்தலஸ்மா Xanthelasma என்பார்கள். உண்மையில் இவை தோலுக்கு அடியிலுள்ள கொலஸ்டரோல் படிவுகளாகும்.


ஆசிய மற்றும் மத்தியதரைக் கடற்பிரதேசத்தைச் சார்ந்தவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இவை வலியையோ அல்லது வேறெந்த சிரமத்தையோ கொடுப்பதில்லை.

ஆயினும் தமது அழகிய தோற்றத்தைக் கெடுப்பதான உணர்வை நோயாளிக்கு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.


இது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பதின் அறிகுறி என பலகாலமாக நம்பப்பட்டது. ஆயினும் அண்மைக் கால ஆய்வுகளின் படி, அத்தகைய தோற் தடிப்பு இருப்பவர்கள் அனைவருக்கும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்து இருப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பலருக்கு நல்ல கொலஸ்டரோலான HDL குறைந்திருக்கும், அல்லது கெட்ட கொலஸ்டரோலில் ஒன்றான ரைகிளிசரைட் (Triglyceride)  அதிகரித்திருக்கும்.

சன்தலஸ்மாவுடன் கொலஸ்டரோல் அதிகமாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பரம்பரையில் கொலஸ்டரோல் அதிகமுள்ளவர்களாக இருப்பர். அல்லது நீரிழிவு நோயாளிகளாகவும் இருப்பது தெரிகிறது.




கொலஸ்டரோல் அதிகரிக்காவிட்டாலும் பாதிப்புண்டு

அத்தகைய தடிப்புகள் உள்ளவர்கள் பலருக்கு கொலஸ்டரோல் அதிகரிப்பதில்லை என்பதால் எதுவிது அக்கறையும் எடுக்காது அசட்டை செய்யலாமா?

நிச்சயமாக இல்லை. குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிக்காவிட்டால் கூட இவர்களுக்கு
  • மாரடைப்பு 
  • பக்கவாதம் 
போன்ற பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட சற்று அதிகமாகும்.

அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, புகைத்தல் போன்ற மாரடைப்பு எற்படுவதற்கான ஏனைய காரணிகளைக் கணக்கில் எடுத்தபோதும் இந்த அதிகரிப்பு இருக்கவே செய்தது. 

எனவே அத்தகையவர்கள் தமக்கு எதிர்காலத்தில் இந்நோய்கள் வராமல் தடுப்பதற்காக
  • உணவு முறைகளில் கவனம், 
  • தினசரி உடற் பயிற்சி, 
போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்துடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதும் நல்லது.
அகற்ற முடியுமா?

பொதுவாக இவற்றை அகற்றுவதில்லை. அகற்றினாலும் 40 சதவிகிதமானவர்களுக்கு 1-3 வருடங்களுக்குள் திரும்பத் தோன்றலாம். சிலருக்கு மறுவும் தோன்ற வாய்ப்புண்டு.

ஆர்க்கஸ் சினலிஸ்

வேறு சிலருக்கு கண் கருவிழியில் வட்டமாக வெள்ளை நிறத்தில் படிவு ஏற்பட்டிருக்கும். இதனை ஆர்க்கஸ் சினலிஸ் (arcus senilis) என்பார்கள்.

இது வெள்ளையாக இருந்தபோதும் வெண்புரை எனும் கற்றரக்ட் அல்ல. அது லென்ஸ்சில் வெள்ளை படிவதாகும்.

மாறாக இது விழித் துவாரத்தைச் சுற்றி கருவிழியில் கொழுப்பு வட்டமாக படிவதாகும். இதனால் பார்வைக் குறைபாடு எதுவும் ஏற்படாது.



இதுவும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதைக் குறிப்பதாகவே நம்பப்படுகிறது. ஆயினும் எப்பொழும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்ல.

மேற் கூறிய ஆய்வின் பிரகாரம் வயது முதிர்வின் போது தோன்றினால் இதற்கும் மாரடைப்பிற்கும் தொடர்பில்லை. வயது அதிகரிப்போடு இது தொடர்புடையது.


பொதுவாக 50வயதிற்கு மேலேயே தோன்றும். ஆண் பெண் இருபாலானாரிலும் காணப்பட்டாலும் ஆண்களில் அதிகம் தோன்றும்.

இதருந்த போதும் 40 ற்கு உட்பட்ட வயதில் தோன்றினால் அது இருதய நோய்கள் வரக் கூடிய சாத்தியத்தை அதிகரி்கிறது.

ஒரு கண்ணில் மாத்திரம் இந்த வெள்ளை வளையம் தோன்றினால் இது மற்றக் கண்ணுக்கான குருதி சுற்றோட்டத்தில் பாதிப்பு இருப்பதாகக் கொள்ளலாம்.

எவ்வாறிருந்த போதும் இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0..0

Post Comment

Sunday, October 9, 2011

கட்டிளம் பருவத்தினரே உங்கள் சுயதோற்றம் திருப்தியளிக்கிறதா?


'இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது' என்றாள் அவள்.


கலந்தாலோசனை முடிந்து வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.

தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.


"அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்" என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.

"மூக்கு சற்று வளைவாக இருப்பதாக" அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.


தனது உடற்தோற்றம், அழகு போன்றவை பற்றிய அக்கறை பெரும்பாலும் பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.
  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும் 
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம். 
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு, 
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல. 
  • தமது சருமம் மிருதுவாக இல்லை, 
  • தனது குரல் கரகரக்கிறது. 
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது. 
  • தலைமுடி கொட்டுகிறது. 
  • நகம் அசிங்கமாக இருக்கிறது. 
இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.


இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.

மனத்தாக்கம் ஏற்படலாம்

தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.

  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது. 
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம். 
அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

அப்படியான மறைஎண்ணம் வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.
  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம். 
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம். 
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம். 
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து 
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.

சிறப்புகளை மீள நினைத்தல் நன்று

உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.

எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.

தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம். நீங்கள் தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும் விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.


"அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே" எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.

உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.
  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.  
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள். 
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.

உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.

அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.




Post Comment