Sunday, July 24, 2011

தியானம் நோய் தீர்க்குமா?


தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள்.

அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தொடர்ந்து செய்யும்படி ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். பல ஆன்மீக நிறுவனங்கள் இலவச தியான வகுப்புகளை நடத்தவும் செய்கின்றன.


கீழைத்தேய வாழ்வியலோடு கூடிய தியானம் இப்பொழுது மேலை நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது.


அமெரிக்க அரசின் ஆதரவோடு 2007ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9.4 சதவிகிதமானோர் அதற்கு முந்தைய ஒரு வருட காலப்பகுதியில் தியானம் செய்திருப்பது தெரியவந்தது.


தியானங்கள் பல வகைப்படும். ஆயினும் அவற்றின் அடிப்படை நோக்கமானது ஒன்றுதான். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளரச் செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவதுதான். பொதுவாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட்டு நல்லாரோக்கியமான நிலையை அடைவதற்கான முயற்சியாகக் கொள்ளலாம்.

அடிப்படைத் தேவைகள்

தியானம் செய்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன?

முக்கியமாக அமைதியான சூழல் தேவை. புறச் சூழலுக்கள் எம்மை ஈர்த்துவிடும் புலன்கள் ஐந்து ஆகும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றை ஐம்புலன்கள் என்றார்கள். இவற்றால் எமது சிந்தனைகள் திசைமாறச் செய்யாத அமைதியான இடம் தேவை.

அமைதியான சூழல் தேவை

தியானம் செய்யும்போது எமது உடல் சௌகர்யமாக இருக்க வேண்டும்.
  • கால்களை மடக்கிப் பத்மாசனம் போட்டு, முதுகை நேர்கம்பமாக நிமிர்த்தி வைத்து, கையிரண்டையும் முழங்கால்கள் மேல் வைத்திருப்பது ஆன்றோர் வழி வந்த முறை. நின்றோ, 
  • நடந்தோ, நிமிர்ந்தோ, படுத்தோ கூடத் தியானம் செய்யலாம். எவ்வாறாயினும் சௌகரியமாக இருந்தால் போதுமானது. ஆயினும் சொகுசு மிகுந்து தூங்காதிருந்தால் சரி!

முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில்

தியானம் இருக்கும்போது முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில் பதிந்திருக்க வேண்டும்.
  • ஒளியைத் தியானம் பண்ணுவர் சிலர், 
  • ஒரு மந்திரத்தில், அல்லது நாமத்தில் கவனத்தை விழுத்துவர் சிலர். 
  • தனக்குகந்த கடவுளின் உருவத்தில் 
  • அல்லது உருவமில்லா உள்ளொளியில் அமைதி காண்பர் வேறு சிலர். 
  • தனது சுவாசத்தையே நினை பொருளாகக் கொள்வோரும் உண்டு.

மனைவியைத் சதாநேரமும் தியானம் பண்ணித் தாஜா செய்வது வேறு!

  • மனதைத் திறந்து வைத்திருத்தல் மற்றொரு முறையாகும். கவனத்தை திசை திருப்பும் விடயங்களை ஓர்மமாக ஒதுக்கித் தள்ளாமல் வருவதையும் போவதையும் இயல்பாக வந்துபோக விட்டுவிட்டு அதில் சிந்தனையை ஆழ்த்தாமல் திறந்த வெளியாக வைத்திருப்பதும் உண்டு.

நோய் தீர்க்க உதவுமா?


மனம் சார்ந்த நோய்கள்

ஒருவரது வாழ்வில் நெருக்கீடு அதிகரித்தால் அதனால் மனப் பதகளிப்பு, மனச்சோர்வு போன்றவற்றிற்கு அவர் ஆளாகலாம். இவை தூக்கக் குழப்பம், கோபம், எரிச்சல், மனத்திருப்தியின்மை ஆகியவற்றைக் கொண்டு வரலாம். இத்தகைய உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட தியானம் நிச்சயம் உதவும்.

உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட



உடல் சார்ந்த நோய்கள்

ஆனால் இவற்றைத் தவிர உடல் சார்ந்த நோய்களுக்கும் உதுவுமா? பல மருத்தவ ஆய்வுகள் உதவலாம் எனக் கோடி காட்டினாலும் தெளிவான முடிவுகள் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

ஆயினும் பல உடல் சார்ந்த நோய்கள் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக
  • ஒவ்வாமைகள், 
போன்றவை பல்வேறு மனரீதியான தாக்கங்களையும் கொண்டு வருகின்றன. இவற்றின் தாக்கத்தைக் குறைக்க தியானம் நிச்சயம் உதவும்.
மூட்டு வலிகள், உடல் வலிகள்,தீர்க்க உதவுமா

ஆயினும் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வழமையான மருந்துகளுக்குப் பதிலாக தியானம் முழுமையாகக் கைகொடுக்காது. எனவே அத்தகைய நோய்களை தியானம் முற்றாகப் பூரணமாக்கும் என்ற எண்ணத்துடன் அவற்றைச் செய்ய வேண்டாம். நோய்க்கான மருத்துவத்தைத் தொடர வேண்டும். அதற்கு ஒத்தாசையாக தியானமும் உதவும். 

எவ்வாறு உதவுகிறது
  • எமக்கு ஏற்படுகிற நெருக்கீடுகள் பற்றி ஒரு முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்குத் துணை செய்யும்.
  • நெருகீட்டைச் சமாளிப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கான ஆற்றலை வளர்க்கிறது
  • தன்னை அறியும் (self-awareness) நிலையை அதிகரிக்கும்
  • மறை உணர்வுகளைக் (negative emotions) குறைக்கும் ஆற்றலை வளர்க்கும்
  • பல விடயங்களை மனதில் இட்டுக் குழப்பாமல் ஒன்றில் மாத்திரம் மனத்தைக் குவிக்க உதவும்.

எனவே தியானம் நிச்சயம் நோய்களின் தாக்கத்தைத் தணிப்பதில் உதவக் கூடிய ஒரு மாற்று முறை என்பதில் ஐயமில்லை. தியானத்தை ஆரம்பித்த உடனேயே பலன் கிடைக்கும் என எண்ணாதீர்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

அத்துடன் இது ஒரு தினசரிக் கடமை எனவோ மேலதிக பாரமா என எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்.

அது பலன் அளிக்கிறதா என நீங்களே முடிவு எடுக்க முயலாதீர்கள். திறந்த மனத்தோடு தொடருங்கள். காலத்திற்கு இடம் அளியுங்கள். நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உதவும்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0




Post Comment

Saturday, July 9, 2011

மலவாயிலில் சிறு தோல் வளர்த்திகள் (Anal Skin Tags)


மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது அதில் ஏதோ கட்டியாகத் தட்டுப்பட்டது.
மூல வருத்தமோ, வேறு ஏதாவது ஆபத்தான கட்டியாக இருக்குமோ எனப் பயந்து வந்தாள் ஒரு நோயாளி.


மலவாயிலில் அரிப்பாக இருக்கிறது என சொன்னார் மற்றொரு ஐயா.
பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு குதத்தை அண்டிய பகுதியில் சிறிய தோல் வளர்த்திகள் தென்பட்டன. (Anal Skin Tags) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


இவற்றின் தோற்றத்தில் பல மாறுபாடுகள் இருக்கக் கூடும். குறிப்பிட்ட ஒரு வடிவமாக இருக்காது. நீளமாக, உருண்டையாக, தட்டையாக, பெயரற்றவை எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். சதைக்கட்டி போலவும் இருக்கலாம்.

இவை காண்பதற்கு அரிதானவை அல்ல. பல நோயாளிகளுக்கு இருக்கின்றன. பலருக்கு அவ்வாறு இருப்பது தெரிந்திருப்பதில்லை.

இவை ஆபத்தானவை அல்ல. பொதுவாக எந்தத் துன்பத்தையும் கொடுப்பதில்லை. பேசா மடந்தைகளாக அடங்கிக் கிடக்கும். மிகச் சிலருக்கு அரிப்பு, வலி தோன்றலாம்.

பொதுவாக இவை குதம் சம்பந்தப்பட்ட வேறொரு நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது அதன் தொடர்ச்சியாக அல்லது பின்விளைவாக இருக்கும்.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • மலம் இறுகும்போதுஇ முக்கிக் கழிக்க நேரிடும். அவ்வேளையில் குதத்தில் சிறு உராய்வுகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காலகதியில் குணமாகும்போது அதில் சிறுதோல் வளர்ச்சியாக மாறும்.
  • அல்லது வெளியே இறங்கிய 'வெளிமூலம்'(External hemorrhoid)சரியான சிகிச்சையின்றி தானாகக் குணமடையும்போதும் அவ்விடத்தில் சிறு தோல்வளர்ச்சியாக வெளிப்படும்.
  • குதப் பகுதியில் முன்பு செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் விளைவாகவும் தோல் வளர்வதுபோலத் தோன்றும்.

வலி வேதனை எவையும் ஏற்படுவதில்லை ஆதலால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. தற்செயலாக மலம் கழுவும்போது அது இருப்பதை உணரக் கூடும்.

அவ்வாறான தோற்சிறு கட்டியுடன் வலியிருப்பதாக நோயாளி சொன்னால்; பெரும்பாலும் குதத்துடன் சேர்ந்த மூல வீக்கம், குத வெடிப்பு, போன்ற வேறு ஏதோ நோயும் சேர்ந்திருப்பதாகக் கருதலாம்.

இந்நோயுள்ளவர்கள் குதவாயிலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது பெரும்பாலும் ஒரு பக்கமாகவே கழுவுவோம்.

பெரும்பாலானவர்கள் குதத்தின் பின் பக்கத்தில் ஆரம்பித்து முன்னுக்கு வருமாறு தமது விரல்களைத் தேய்த்தே கழுவுவார்கள். இதனால் தோல் வளர்த்தியின் மறுபுறத்தில் மலம் சிறுதுணிக்கைகளாக அடையும் சாத்தியம் உண்டு. கட்டிகள் பல அவ்வாறான இருந்தால் சுத்தத்தைப் பேணுவது மேலும் சிரமமாகும்.

சுகாதாரக் குறைவு காரணமாக அவ்விடத்தில் அழற்சி ஏற்படும். இது அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு அடங்கச் சொறியும்போது புண்பட்டால் கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிலையை மோசமாக்கும்.

சிகிச்சை

எந்தவித பிரச்சனையும் இல்லாவிட்டால் அவ்வாறான தோற்சிறு கட்டிகளுக்கு யாதொரு சிகிச்சையும் அவசியமில்லை. அரிப்பு, வலி, சுகாதாரத்தைப் பேணுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை வெட்டி நீக்கிவிடலாம்.

அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி போட்டுவிட்டு சிறு சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். மருத்துவ நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிபெற்று நின்று செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலும் வெளிநோயாளியாகச் செய்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பக் கூடிய சாதாரண சிக்கிச்சையே இது.

வீக்கமடைந்த பப்பிலே (Enlarged Papillae) , வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி (Polyps), போற்றவையும் குதத்தருகே தோன்றக் கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியாக நோயை நிர்ணயிப்பது அவசியம்.

குத வெடிப்பு (Anal fissure)


பிஸ்டுலா (fistula) போன்ற கிருமித் தொற்றுள்ள மலக்குடல் சார்ந்த புண்களில்,

Fistula in ano
 அவற்றின் குத ஓரமான முனையை மூடி தோல் வளர்த்தி ஏற்படுவதுண்டு.  இதனை sentinel tag என்பார்கள். சற்று தீவிரமான அந்த அடிப்படை நோய்க்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவம் செய்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0


Post Comment

Saturday, July 2, 2011

இரத்த கொலஸ்டரோலும் உணவிலுள்ள கொலஸ்டரோலும்


ஒருவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறது என்பது தெரிந்ததும் அவர் கேட்கும் முதற் கேள்வி என்ன சாப்பிடலாம் என்பதுதான். உண்மைதான் உணவுமுறைக்கும் கொலஸ்டரோலுக்கும் தொடர்பு இருக்கிறதுதான்.

ஆனால் உணவு மட்டும் காரணம் அல்ல.


உங்களது இரத்தத்தில் உள்ள கொலஸ்டலோலுக்கும் உங்கள் உணவிலுள்ள கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தங்களது உணவிலுள்ள  கொலஸ்டரோல்தான் தங்கள் இரத்தத்தில் பிரதிபலிக்கிறது எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இரண்டிற்கும் இடையே தொடர்பு மிகக் குறைவே. உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோல் அப்படியே உங்கள் இரத்த கொலஸ்டரோலாக மாறுகிறது என்றில்லை.

ஒருவரது இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு அவரது
  • சகலவிதமான உணவு முறைகளும்,
  • பரம்பரைக் காரணங்களும், 
  • வாழ்க்கை முறைகளும் காரணமாகின்றன.

உண்மையில் உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோலுக்கும் உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. தாவர உணவுகளில் கொலஸ்டரோல் அறவே கிடையாது.

ஆனால் நாம் உண்ணும் நிரம்பிய கொழுப்பிலிருந்து (Saturated fatty acids) எமது உடலே கொலஸ்டரோலை உருவாக்கிக் கொள்கிறது.


இதனால்தான் தமது உணவில் மிகச் சிறிய அளவு கூட கொலஸ்டரோலை உட்கொள்ளாத முழுமையான தாவர உணவாளர்களுக்கும் கூட இரத்த கொலஸ்டரோல் பிரச்சினையும், இருதய நோய்களும் வரச் செய்கின்றன.

மறுதலையாகப் பார்க்கும்போது தாய்வான், ஐப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தமது உணவில் அதிகளவு முட்டையையும், வேறு அதிக கொலஸ்டரோல் உணவுகளையும் உட்கொண்டு வந்த போதும் அவர்களுக்கு இருதய நோய்கள் வருவது குறைவாக இருக்கிறது. அதாவது முழுமையான தாவர உணவாளர்களைவிடவும் பாலுணவும் சேர்த்து எடுக்கும் தாவர உணவாளர்களை விடவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படிக் கூறுவதின் அர்த்தம் “கொலஸ்டரோல் அதிகமுள்ள உணவுகளை வேண்டியளவு உண்ணுங்கள், உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கு எதுவும் நடக்காது” என்பதல்ல. உங்கள் இரத்த கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பதற்கு உணவைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன, அவற்றையும் கவனித்தல் அவசியம் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglyceride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.
இவற்றின் அதிகரிப்பிற்கு
  • உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75% மும், 
  • உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும். 
ஆனால் தனி ஒரு அலகாகப் பார்க்கும்போது ஏனைய எந்த ஒரு அலகும் உணவு சார்ந்த காரணிகளான 25%யை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன

1. பரம்பரை 15%
2 அதிகரித்த எடை 12%
3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8%
4 உயர் இரத்த அழுத்தம் 8%
5 அதிக மது பாவனை 2%
6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8மூ
7 நீரிழிவு 7%
8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6%
9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6%
10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5%

இவற்றில் சில உங்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. பரம்பரை, பால், வயது, ஹோர்மோன்களும், நொதியங்களும் போன்ற ஏனையவை உங்கள் கட்டுப்பட்டிற்கு அப்பாற்பட்டவை.

கொலஸ்டரோல் பற்றிய எனது ஏனைய பதிவுகள்



கட்டுப்படுத்தக் கூடிய அலகுகளான
  • எடை, 
  • பிரஸர், 
  • மதுபாவனை, 
  • நீரிழிவு, 
  • புகைத்தல், 
  • மனப்பழுவும், 
  • உணர்ச்சி நிலைகள் 
போன்றவற்றை நல்ல நிலையில் பேணுவதுடன் ஆரோக்கியமான உணவை உண்பதும் உங்கள் கொலஸ்டரோலை கட்டுப்படுத்தும். அதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவும்.



“கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி“ என்ற  எனது மருத்துவக் கைநூலிலிருந்து.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment