Saturday, May 28, 2011

உங்கள் வீட்டிலும் மூளை அசதி நோய் (Alzheimer's disease) இருக்கக் கூடுமா?


உங்கள் வீட்டில் ஒரு வயதானவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அண்மைக் காலங்களாக அவரது வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன என வைத்துக் கொள்வோம்.

மறதி, நினைவுத் தடுமாற்றம், வழமையாக முகம் கழுவுதல் ஸேவ் எடுத்தல் போன்ற பணிகளையும் செய்வதில் சிரமம் ஏற்படுதல், இப்படியாகப் பல. அத்தோடு அவர் முன்னரைப் போல மற்றவற்றில் ஈடுபாடின்றி ஒதுங்கிப் போவது போன்றவற்றை அவதானிக்க முடிகிறதா?

வயசானால் இப்படித்தான் என அலட்சிப்படுத்தாதீர்கள். ஏனெனில் அது ஒரு நோயாக இருக்கலாம். உதாரணம் வேண்டுமென்றால் Black என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அமிதாப் பச்சான் நடித்த பாத்திரத்தை நினைவுறுத்துங்கள்.


அல்ஸீமர் நோய் (Alzheimer's disease) என்பதை வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். 'முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்' எனலாம். இது பொதுவாக 65க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி, வழமையான வயது முதிர்வதின் தாக்கம் அல்ல.

இது படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்றது. ‘மூளை அசதி நோய்’ எனவும் சொல்கிறார்கள் அதுதான் அல்ஸீமர் நோய் (Alzheimer's disease).

இது வரவர தீவிரமடைந்து செல்கிற நோய். மாற்ற முடியாதது. சிகிச்சைகளினால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியுமே அன்றி, முற்று முழுதாக நிறுத்த முடியாது. எனவே அல்ஸீமர் நோயை ஆரம்பத்தில் கண்டறிய முயலுங்கள்.




அல்ஸீமர் நோயல்லாத வேறு நினைவு மங்கும் நோய்களும் உள்ளன. ‘அறளை பெயர்தல்’ என்ற சொல் அவற்றிக்குப் பொருந்தலாம். முதுமையில் ஏற்படும் மறதி, அறிவாற்றல் இழப்பு, மறதி போன்றவற்றை ஆங்கிலத்தில் (Dementia) என்பார்கள். 'மூளைத் தேய்வு' என்ற சொல் Dementia ற்கு பொருத்தமாக இருக்கும். இவை வயதாவதால் ஏற்படுபவை.


அல்ஸீமர் நோய்.

இந்த நோயைக்  கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக அறிகுறிகள் தாம் உதவுகின்றன.ஆனால் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிப்பது மிகவும் சிரமமானது.

நாளாந்த வாழ்க்கை முறையைக் குலைக்கும் நினைவுத் தடுமாற்றம்.

அண்மையில் நடந்த சம்பவங்களையும், அறிந்து கொண்ட, கற்றுக் கொண்ட விடயங்களையும் மறந்துவிடுவதுதான் அல்ஸீமர் நோயின் மிக முக்கியமான ஆரம்ப அறிகுறி எனலாம். மிக நெருக்கமானவர்களின் திருமண நாள், பிறந்தநாள்  போன்ற முக்கிய தினங்களை மறந்து விடுவதும், மிக முக்கிய சம்பவங்களை நினைவில் காப்பாற்ற முடியாததும் இந்நோயின் ஏனைய அறிகுறிகளாகும்;.

மறந்து விடாதிருக்க கலண்டரில் அல்லது டயறியில் குறித்து வைப்பதும், குறித்து வைத்ததையே மறந்துவிடுவதும், மறதியைத் தாண்ட காலத்தோடு சேர்ந்து ஓடும் சில வயதானவர்கள் கணனியை அல்லது வேறு இலத்திரனியல் கருவிகளை நினைவுறுத்துவதற்கு பயன்படுத்துவதுண்டு.

பெயர்களை மறப்பதும், செய்ய வேண்டிய முக்கிய வேலைகளையும், நிகழ்வுகளையும் மறப்பது அல்ஸீமர் நோயின் முக்கிய அறிகுறி எனலாம்.

திட்டமிடுவதிலும் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் சவால்களை எதிர்கொள்ளல்

ஒரு பணியைத் திட்டமிடுவதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம். சில்லறைக் கணக்குகள் பார்ப்பதிலும், வழமையான மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதிலும் பிரச்சனைகள் தோன்றலாம். வழமையான பல செயற்பாடுகளை செய்வதற்கு இப்பொழுது முன்பை விட கூடியளவு நேரம் தேவைப்படலாம்.

வீட்டிலோ, வேலைத்தளத்திலோ அல்லது ஓய்வின் போதோ நன்கு பரிச்சயமான வழமையான பணியைச் செய்வதில் சிரமங்களை எதிர் கொள்ளல்.

நாளாந்தக் கடமைகளை செய்து முடிப்பது பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு கடினமாயிருக்கும். உதாரணத்திற்கு வழமையாகச் சென்று வரும் வங்கி, கோயில், நண்பர் வீடு போன்ற இடத்திற்கான வழியை மறந்து விடுவார். வழமையாக செஸ், சீட்டாட்டம் போன்ற ஏதாவது விளையாடுபவர் அந்த விளையாட்டின் விதிகளை மறந்துவிடக் கூடும்.

காலம், நேரம், இடம் பற்றிய தடுமாற்றம்

பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு அன்றைய திகதி என்ன?, காலையா, மாலையா அல்லது மாரி, கோடைஇ காலநிலை போன்றவற்றை நினைவுக்கு கொண்டுவருவதில் குழப்பம் ஏற்படலாம். சில தருணங்களில் தாங்கள் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு அவ்விடத்திற்கு வந்தோம் என்றவற்றை மறந்து தடுமாறுவர்.

உதாரணத்திற்கு இன்று ஞாயிறா திங்களா எனக் குழம்புவார். ஆயினும் பின்னர் நினைவுக்கு கொண்டு வந்துவிடுவார்.

உருவங்களை சூழலுடன் பொருத்திப் பாரப்பதில் ஏற்படும் சிக்கல்கள்.

ஒரு சிலருக்கு பார்வைக் கோளாறு மட்டுமே அல்ஸீமர் நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் சிலருக்கு சிரமம் தோன்றும். சிலருக்கு கண்ணில் படும் உருவங்களுக்கு இடையேயான தூரம், நிறவேறுபாடு ஆகியவற்றை வேறுபடுத்தி நிர்ணயிப்பது கஸ்டமாயிருக்கும். உதாரணத்திற்கு முகம் பார்க்கும் கண்ணாடியைத் தாண்டிச் செல்லும் போது அதில் உள்ள விம்பத்தைப் பிரித்தறிய முடியாது வேறு யாரோ அறையில் இருப்பதாக உணரக் கூடும்.

உரையாடுதலிலும் எழுதுவதிலும் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளல்.

மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அதனை புரிந்து கொள்வதிலும் அதில் இணைந்து கொள்வதும் இவர்கள் பலருக்கும் முடியாதிருக்கும். தான் பேசிக்கொண்டிருக்கையில் அதனை எவ்வாறு தொடர்வது எனப் புரியாமல் பேச்சை நிறுத்துவார். அல்லது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவும் கூடும். சரியான சொற்கள் வேண்டிய நேரத்தில் வராமல் திணறுவர். உதாரணத்திற்கு டோர்ச் லைட் என்பதை விளக்கு என்றோ, புத்தகம் என்பதைப் பேப்பர் என்பதாகவோ சொல்லக் கூடும்.

பொருட்களை அதற்கான இடத்தில் வைக்காமல் வேறு இடங்களில் வைப்பதும், அவற்றைப் பின்பு கண்டு பிடிக்கத் திணறுவதும்.

ஒரு பொருளை அதற்கான இடத்தில் வைக்காது பொருத்தமற்ற இடத்தில் வைப்பது அல்ஸீமர் நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும். உதாரணமாக  புத்தக அலுமாரியில் வைக்க வேண்டிய புத்தகத்தை வழிபாட்டு மேடையில் வைப்பார், அல்லது பர்சில் வைக்க வேண்டிய பணத்தை மூக்கு கண்ணாடி உறையில் வைப்பார். பிறகு அதனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது திணறுவார். யாராவது அதனைத் திருடிவிட்டதாக குற்றம் சாட்டக் கூடும். காலம் செல்லச் செல்ல 

தீர்மானம் எடுப்பதில் சிரமம்

அல்ஸீமர் நோயாளிகள் சரியான தீர்மானம் எடுப்பதில் சிரமப்படுவார்கள். தவறான முடிவு எடுக்கவும் கூடும். உதாரணமாக பெருந்தொகை பணத்தை தவறான நபருக்கு கொடுக்க திடீரென முடிவு எடுக்கக் கூடும். குளிப்பது, முகம் கழுவுவது, சுத்தமான ஆடைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பார். தனது சுத்தத்திலும், வீடு படுக்கை போன்றவற்றின் சுத்தத்திலும் அக்கறையற்று இருப்பார்.

தொழில் மற்றும் சமூகக் கடமைகளில் இருந்து ஒதுங்கக் கூடும்

ரீவீ பார்ப்பது, பத்திரிகை, புத்தகம் படிப்பது, விழாக்களுக்கு செல்வது, நண்பர்களுடன் பொழுது போக்குவது போன்ற தனது வழமையான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கக் கூடும். தனக்கு விருப்பமான செயற்பாடுகளைக் கூட செய்து முடிக்க முடியாது மறப்பதும் இவர்களுக்கு இயல்பு. கட்டாயம் செல்ல வேண்டிய திருமணம், மரணவீடு ஆகியவற்றிக்கு செல்வதிலும் அக்கறை அற்று இருப்பது சகசம்.

அவரது வழமையான மனநிலை, குணஇயல்பு மாற்றம்.

முன்னரைப் போன்ற மனிதராக இருக்கமாட்டார். மனக்குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, பீதி, மனப்பதற்றம் போன்றவை மேலோங்கக் கூடும். மிக அற்பமான விடயங்களுக்கும் நிலை ததும்புவராக மாறுவார். இதனால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழிலகத் தோழர்கள் இடையே ஆன உறவுகள் விரிசலடையலாம்.


இத்தகைய அறிகுறிகளில் ஒரு சிலவாவது உங்கள் உறவினருக்கு இருந்தால் அது அல்ஸிமர் நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஏதற்கும் நீங்களாக முடிவெடுக்காது நல்ல மருத்துவரை அணுகுங்கள்.

இது முற்று முழுதாகக் குணப்படத்த முடியாத நோய் என்ற போதும், அது மேலும் தீவிரமாகி வாழ்வை நாசமாக்காது தடுக்க முடியும்.

இந்த நோயை முதல் முதலாக இனங்கண்டவர் ஒரு ஜேர்மன் மருத்துவர். Dr.Alois Alzheimer என்பது அவர் பெயர். அவரது நோயாளி Frau Augste என்பராவார்.

வயதான காலத்தில் ஏற்படும் மூளை மங்குதலைத் தடுப்பது பற்றி மேலும் வாசிக்க...மூளை மங்குதலைத் தடுக்க நடைப்பயிற்சி

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Sunday, May 15, 2011

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே என யானை முகத்தானைப் பக்தர்கள் துதித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் பானை வயிறுள்ளவர்கள் மற்றவர்களைக் காப்பது முடியாது என்பது மட்டுமல்ல தம்மையும் காப்பது கடினம் என நவீன மருத்துவம் கூறுகிறது.


பானை வயிறு என்றால் என்ன?

எமது உடலில் கொழுப்பு உள்ளது. உடலின் எடை அதிகரிப்பிற்கு இந்தக் கொழுப்பு மிக முக்கிய காரணமாகிறது. எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமான கொழுப்பானது எமது சருமத்தின் கீழ் இருக்கிறது.

அதே போல எமது வயிற்றறையிலும் இருக்கிறது. வயிற்றறையில் இருக்கும் கொழுப்பு, தசைகளுக்கும் கிழே உள்ளுறுப்புகளுடன் சேர்ந்திருக்கும்;போதே வயிறு அதிகம் பருமனாகிறது. தொந்தி விழுகிறது. ஆபத்து மிக அதிகமாகிறது.


அதீத எடை ஆபத்தானது

அதீத எடையின் ஆபத்துக்கள் பலவாகும்.

அதீத எடையானது பல ஆபத்தான நோய்களுக்குக் காரணமாகிறது என்பதை அறிவீர்கள்.

அதீத எடை என்பது உடற் திணிவுக் குறியீடு (BMI-30) 30ற்கு மேல் என மதிப்பிடுகிறார்கள்.

பணச் செழிப்பும் உணவு அதிகம் நிறைந்ததுமான அமெரிக்காவில் மட்டும் 72 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறான அதீத எடை கொண்டவர்களாகும்.

  • நீரிழிவு
  • குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • ஆஸ்த்மா
  • முழங்கால் தேய்வு உட்பட்ட மூட்டு நோய்கள்
  • தூக்கத்தில் மூச்சுத் திணறல்

போன்ற பல நோய்களுக்குக் அடிப்படைக் காரணமாகிறது. எனவே தான் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 ஒரே ஒரு நன்மையா?

பாதிப்புகள் பல இருந்தபோதும் ஒரே ஒரு நன்மை அவதானிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களில் மட்டும். அதிக எடையுள்ள பெண்கள் மெலிந்த பெண்களைவிட குறைந்தளவே எலும்புத் தேய்வுக்கு ஆளாவதாக அறியப்படுள்ளது.

இருந்த போதும் இது பற்றி இப்பொழுது மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதீத எடை கொண்ட பெண்களில் கொழுப்பானது வயிற்றறையில் இருந்தால் அவர்களது எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருப்பதுடன் எலும்பிலும் கொழுப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இது காலகதியில் இடுப்பு எலும்பு முறிவு, முள்ளதண்டு எலும்புகளில் உடைவு ஆகியவற்றைக் கொண்டு வரும்.

அதாவது கொழுப்பு சருமத்தின் கீழ் இருப்பதை விட வயிற்றறையில் இருந்தால் பாதிப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒஸ்டியொபொரோசிஸ்

அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் மக்கள் எலும்பு அடர்த்தி குறைந்த ஒஸ்டியொபொரோசிஸ் (Osteoporosis) நோயினால் துன்பப்படுகிறார்கள். மேலும் 10 மில்லியன் மக்களின் எலும்புகள் நலிவுற்று அந்நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள். 


 
எமது நாட்டிலும்  இந் நோயினால் பலர் இடுப்பு எலும்பு முறிந்து சிரமப்படுகிறார்கள்.

இதற்கான சத்திர சிகிச்சைகள் இருந்தபோதும் அது செலவானதும் சிரமமானதும் ஆகும். முள்ளத்தண்டு எலும்பு உடைவு மற்றும் சிதைவு காரணமாக முதுகுவலி, கால்வலி, குனிந்து வேலை செய்ய முடியாமை எனப் பல தொல்லைகளுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பற்றிய தரவுகள் இங்கு கிடையாது. ஆனால் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றறைக் கொழுப்பின் ஏனைய பாதிப்புகள்

வயிற்றறைக் கொழுப்பு அதாவது தொந்தி வண்டியானது எலும்புப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இருதய நோய்கள், நீரிழிவு ஆகியன ஏற்படுவதற்கும் மிக முக்கிய காரணங்களாகும்.

அதனால்தான் பல மருத்துவர்கள் பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, எடை ஆகியவற்றை அளவிடுவதுடன் வயிற்றின் சுற்றளைவையும் அளந்து பார்க்கிறார்கள்.

அளந்து பாருங்கள்

உங்கள் வயிற்றில் கொழுப்பு அதிகமிருப்பதை அறிவது எப்படி? வயிற்றின் சுற்றளவை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி.

கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். நாங்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகளாவன

ஆண்களுக்கு 90 செமி அல்லது 35.4 அங்குலங்கள் குறைவாக
பெண்களுக்கு 80 செமி அல்லது 31.5 அங்குலங்கள் குறைவாக


இதற்கு  மேல் அதிகரிக்க விடாதீர்கள்.


வயிற்றறைக் கொழுப்புக்குக் காரணங்கள்

வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணங்கள் என்ன? பொதுவான எடை அதிகரிப்பிற்குக் காரணமான அதே தவறான உணவுமுறைகளும், போதிய உடற் பயிற்ச்சி இல்லாததுமே ஆகும். ஆனால் அத்துடன் பரம்பரைக் காரணங்களும் உள்ளன. இயற்கையாகவே மேலை நாட்டவர்களை விட ஆசிய நாட்டவர்களுக்கு வயிறு வைப்பது அதிகம்.

முயற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உணவுமுறைகளுடன் தினசரி உடல் உழைப்பு அல்லது பயிற்ச்சி மூலம் உங்கள் எடையையும் முக்கியமாக வயிற்றில் கொழுப்பையும் குறைத்து உடல் நலத்தை அக்கறையுடன் பேணவேண்டும்.

இரத்தத்தில் கொழுப்பு

இரத்தத்தில் கொழுப்பு என்பது முற்றிலும் வேறு விடயம். அது கொலஸ்டரோல் பற்றியது. அதீத எடையுள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாயினும் மெலிந்த எடை உடையவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.


Source: Radiological Society of North America, December 2010

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Saturday, May 7, 2011

குந்தியிருந்தலும் குறட்டல் நோயும் (கெண்டை பிடித்தல் Leg Cramps)


பத்மாசனம் தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் குந்தியிருப்பது என்றாலே தெரியாத தலைமுறை வந்துவிட்டது. எமது இயற்கையான பழக்கங்களைக் கைவிடுவதால் எமது உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகங்களை அறிந்திருக்கிறோமா?


இதுவும் அத்தகையாதுதான். இயற்கையோடு வாழாததால் இழந்தது.

மிகவும் துன்பப்படுத்தும் நோய் அது. எழுந்து நடப்பதா, மசாஸ் பண்ணுவதா, யாரையாவது பிடித்துவிடச் சொல்வதா, அல்லது எதுவும் செய்யாது அசையாமல் படுத்துக்கிடப்பதா எனத் புரியாது திகைக்க வைக்கும்.

வலி தாங்க முடியவில்லை. கெண்டை பிடிக்கிறது.

பலருக்கு நட்டநடு நிசியில் வருவதால் துணைக்கு யாரும் இன்றிப் பயமாகவும் இருக்கும். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன இந்தச் சின்ன விசயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் எனச் சிரிப்பாக இருக்கும்.

ஆம் கிறாம்ஸ் (Cramps) எனப்படும் தசைக் குறட்டல் நோய் ஆபத்தற்றது. குறுகிய நேரம் மட்டுமே நீடித்தாலும் மிகவும் துன்பபப்படுத்துகிற நோயாகவும் இருக்கிறது.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு எந்த மருந்து மிகவும் உதவக் கூடியது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.


கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சியும் அதனுடன் தொடர்ந்து வரும் நீரிழப்பு நிலையும்தான் காரணம் என்பது பரவலான நம்பிக்கையாகும். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்தபோதும், அதனுடன் உடல் உப்புகள் பெருமளவு வெளியேறியபோதும் குறண்டல் வரவில்லை என்கிறது ஒரு ஆய்வு. (Ref:- Med Sci Sports Exerc. 2010 Nov;42(11):2056-63.)


யாருக்கு வருகிறது

எவருக்கும் குறட்டல் நோய் வரக் கூடுமாயினும் சில வகை மனிதர்களை, சில சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கிறது.

  • கர்ப்பிணிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்போது கர்பமாயிருக்கும் பெண்களில் சுமார் அரைவாசிப் பெண்களுக்கு குறட்டல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
  •  வயதானவர்களில் 1ஃ3 பேர் பாதிக்கப்படுவதாக அறிய முடிந்தது. இவர்களில் பலர் 10வருடங்களுக்கு மேலாகத் துன்பப்பட்டிருந்தாலும் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பல குழந்தைகளுக்கும் வருவதுண்டு
  •  இரவில் வரும் குறட்டல் அதிகமாகும்
  • கடுமையான வெய்யிலில் உடல் உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபட்டால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
  • ஈரல் நோயுள்ளவர்கள், அதீத மது பாவனையாளர்கள், டயலிசிஸ் செய்யப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எனப் பல்வேறு தரத்தினரும் பாதிப்படைகிறார்கள்.

எவ்வாறு ஏற்படுகிறது

குறட்டல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு பல விளக்கங்கள் கூறுப்படுகின்றன.

  • தெரியாத காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் தூண்டப்படுவது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
  • ஏற்கனவே முழுமையாகச் சுருங்கியுள்ள தசை இழையங்கள் திரும்பவும் தூண்டப்படுவதும் மற்றொரு காரணமாம்.
  • குறிப்பிட்ட பகுதியிலுள்ள தசை இழையங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத போதும் நேரலாம். இது மாரடைப்பை ஒத்தது. மாரடைப்பின்போது இருதயத்தின் தசைநார்களுக்கு இரத்தம் செல்வது குறைவதால் அல்லது முற்றாகத் தடைப்படுவதால் மாரடைப்பு நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது.
  • தசைகளுக்கு நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகள் குறைவாக இருப்பதாலும் ஏற்படலாம். 
உதாரணமாக முன்பு நிலத்தில் உட்கார்ந்த மனிதன் இப்பொழுது நாற்காலியில் உட்காருகிறான். மலசலம் கழிப்பதற்கு குந்தியிருந்தவன் இப்பொழுது கொமோட்டில் உட்காருகிறான்.

இவற்றினால் அவனது கால் தசைகளுக்கு பயிற்சி அற்றுப் போய்விட்டது இதுவே குறட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள்.

மருத்துவம்.

ஒரு குறிப்பிட்ட சிகிச்சை அனைவருக்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது. ஓவ்வொருவருக்கும் அவர்களது நோய்கான காரணம் எதுவென பகுத்தறிந்து செய்ய வேண்டியுள்ளது.

பொதுவாக குயினின் என்ற மருந்து இதனைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும் உணவு சார்ந்த முறைகளில் இப்பொழுது ஆர்வம் திரும்பியிருக்கிறது. தசைகளின் செயற்பாட்டிற்கும் நரம்புகளின் தூண்டலுக்கும் பல மூலகங்கள் அடிப்படையாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக Potassium, Magnesium, Sodium and Calcium போன்றவை முக்கிய பங்களிக்கின்றன. 

உப்புக் கரைத்துக் கொடுப்பது, இளநீர் அருந்துவது போன்றவை சிபார்சு செய்யப்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் இவற்றை மேலதிகமாகக் கொடுப்பதால் கெண்டைப் பிடிப்பைத் தடுக்கலாம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல விட்டமின் சீ, ஈ (Vitamin C, Vitamin E) போன்றவையும் உதவலாம். ஆயினும் இவை பற்றியும் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment