Thursday, January 27, 2011

மூட்டு வலிகளுக்கு பூச்சு (ஜெல்) மருந்துகளின் நன்மைகளும் பிரச்சனைகளும்

வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப்பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சியமாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணய் பூசுவதால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதையில்லை. அவை எனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ்வாறு பூசுவதால் பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ்வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடையாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்பட்டன.


நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற்படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார்களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மருந்தை மாத்திரைகளாக கொடுக்கும்போது ஏற்படும் வலிநிவாரணத்திற்கு ஒத்ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உதவுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.

பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்திரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்கவிளைவு குடல் சம்பந்தமானாதாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. அத்துடன் இவை இரத்த அழுதத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. இருதய நோய்களைக் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுபவத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத்தகைய பக்கவிளைவுகள் மிகக் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மருந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ்சப்பட்டு குருதிவழியாக உடலெங்கும் பரவுகிறது. இருந்தபோதும் வலியுள்ள இடத்தில் உறிஞ்சப்படும் மருந்தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.
  • நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொடர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 
  • அத்துடன் தோலில் அரிப்பு, எரிவு, சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 
  • சிலரில் கொப்பளங்கள் போடுவதும், எக்ஸ்சிமா போன்றவை வருவதும் உண்டு.
இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதாரணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளைவரசளைiபெ ஊசநயஅ) உபயோகிப்பதன் மூலம் தடுத்துவிடலாம்.

எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவுமா?

மருந்தகங்களில் வலிக்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்துகள் விற்பனையாகின்றன. இவை யாவுமே பயனுள்ளவையா எனக் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின்றன. இவை பயனளிக்கும்.
 

அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலிநிவாரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்றவற்றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாசனையையும், பூசுமிடத்தில் சற்று எரிவையும் ஏற்படுத்துவதுடன் நோயாளிக்கு மனதுக்கு இதமான உணர்வையும் கொடுக்கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

எனவே வலிநிவாரணி மருந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை உங்கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத்துங்கள்.

கடையில் கிடைப்பதையெல்லாம் பூசி காசை வீணாக்காதீர்கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்
  1. மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்
  2. மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden's Node)
  3. முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  4. நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் தினசரியின் ஹாய்நலமா ? பத்தியில் 15.12.2010 ல் நான் எழுதிய கட்டுரை

Post Comment

Tuesday, January 18, 2011

தோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல


அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்திக் கொண்டு நின்றன. கையை நீட்டியபோது முன்கையில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.


வேறும் இருக்கிறதா எனக் கேட்டபோது இடது முழங்கையின் உட்புறமாக ஒன்று சாடைமாடையாகத் தெரிந்தது. கண்ணில் தெரிந்ததைவிடத் தடவிப் பார்த்தபோது தெளிவாகப் புரிந்தது.

ஏதாவது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமா எனச் சந்தேகிக்கிறீர்களா? இல்லை. அந்தப் பெண்மணிக்கே புற்றுநோய் என்ற பயம் இருக்கவில்லை. ஏனெனில் பல வருடங்களாக இருக்கின்றன. எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

கொழுப்புக் கட்டிகள் - லைப்போமா (lipoma) எனப்படும் இவை ஆபத்தற்றவை. புற்று நோய் என்ற கலக்கத்திற்கு இடமே இல்லை. இவை சருமத்திற்குக் கீழாக வளர்கின்றன. தசை, சவ்வு எலும்புகள் போல ஆழத்தில் இருப்பதில்லை. மேற்புறத்தில் மட்டுமே இருக்கும். ஒன்று முதல் பல கொழுப்புக் கட்டிகள் ஒருவரில் தோன்றக் கூடும்.
 

பொதுவாக கட்டிளம் பருவத்திலேயே ஆரம்பித்தாலும், நடுத்தர வயதில் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் இருபாலாரிலும் தோன்றும்.

காரணம் உண்டா?

இவை தோன்றுவதற்கான காரணம் தெரியாது. பொதுவாக குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களில் அவதானிக்கப்படுவதால் பரம்பரைக் காரணிகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளிப்டையான காயங்கள் இல்லாத ஊமைக் காயங்கள் அல்லது கண்டல் காரணங்களால் ஏற்படக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

அறிகுறிகள்

திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக பல வருடங்களின் பின்னர் அதுவும், தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே ஒருவர் அவதானிப்பார். வெளிப்படையாகத் தெரிய மேலும் காலம் எடுக்கும்.

பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாப் போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

தோலுக்குள் கீழாக நளுநளுவெனத் தோலுடன் ஒட்டாது நழுவிச் செல்வது போலிருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காண்கிறோம்.

தோள், கழுத்து முதுகு, வயிற்றுப் புறம், கை போன்ற இடங்களில் காணப்;படுகிறது. ஆனால் சருமத்தில் கொழுப்பு உள்ள இடமெங்கும் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பி;த்தக்கது.

புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் உடனடியாக ஆபத்தானவை அல்ல என்றாலும் இவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. ஆனால் அவ்வாறு மாறுவதில்லை.

ஆயினும் லைப்போ சார்க்கோமா என்ற ஒருவகை கொழுப்புப் புற்றுநோய் இருக்கிறது. தோலில் அல்லாது சற்று ஆழத்தில் கண்ணில் படாதவாறு இருக்கும் சில கொழுப்புக் கட்டிகள் திடீரென பருமனடைந்து வலியையும் கொடுக்குமாயின் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். ஊசி மூலம் சிறு துளியை எடுத்து ஆராய்ந்து (biopsy) பார்ப்பார்கள்.
 

சிகிச்சை

பொதுவாக எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. ஓரளவு காலத்தின் பின் அது வளர்ச்சியடைவது தானாகவே நின்றுவிடும். ஆயினும் மறையாது. அது இருப்பதால் அருகில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கு பிரச்சனை இருக்குமாயின் அகற்ற நேரிடும். சத்திர சிகிச்சை மூலம் அன்றி உறிஞ்சி எடுப்பதன் (Liposuction)    மூலம் அகற்றலாம்.


புற்றுநோயல்லாத மற்றொரு கட்டி பற்றிய எனது முன்னைய பதிவு
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, January 9, 2011

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?

வரட்சியான சருமம் ஏன் ஏற்படுகிறது, அது மோசமடைவதற்குக் காரணங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன? இவை போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

சருமத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி இன்று பார்க்கலாம்.


நீங்கள் செய்யக் கூடியது என்ன?

ஏற்கனவே கடுமையாக வரட்சியடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான போதும் உங்கள் சருமத்தை நலமுடன் பாதுகாக்க நிறையவே நீங்கள் செய்யக் கூடியவை பல.
சருமத்தை ஈரலிப்பாக வைத்திருங்கள்.

சருமத்தின் ஈரலிப்பைப் பேணுவதற்கான பல வகை கிறீம்களும், லோசன்களும் இப்பொழுது கிடைக்கின்றன.

இவை மென்படையாக பரவி சருமத்திலிருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இவற்றைக் குளித்த உடன் போடுவது நல்லது.

மிகக் கடுமையான தோல் வரட்சியெனில் பேபி ஓயில் போன்ற எண்ணெய் வகைகள் கூடிய பலனளிக்கும். இது கூடிய நேரத்திற்கு உங்கள் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்க உதவும்.

அளவான குளிப்பு

முன்னரே குறிப்பிட்டது போல அதிக நேரம் நீரில் ஊறுவது சருமத்திற்கு கூடாது. எனவே குளிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். சாதாரண நீரில் குளிக்கலாம். சுடுநீர் தேவையெனில் கடுமையான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டாம். நகச் சூடு போதுமானது.

சோப்

  • சருமத்திற்கு ஆதரவளிக்கும் மென்மையான சோப் வகைகளைப் பாவிப்பது நல்லது. 
  • கிருமி நீக்கி (antibacterial) மற்றும் காரமான சோப் வகைகள் அறவே கூடாது. 
  • அதே போல மணம் நீக்கிகளும் (deodorant) நல்லதல்ல. 
  • எண்ணெய் மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட சோப் வகைகள் நல்லது. Neutrogena, Dove போன்றவை அத்தகையவையாகும்.

ஆனால் அதற்கு மேலாக சோப் அற்ற சுத்தமாக்கிகள் கிடைக்கின்றன. Cetaphil, Dermovive Soap Free wash போன்றவை அத்தகையன.

ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகை ஒத்து வரலாம். அதைக் கொண்டு சுத்தமாக்கிய பின் உங்களது சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதாக உணர்கிறீர்களோ அதுவே நல்லதெனலாம். மூலிகைகள் அடங்கிய சோப் வகைகள் நல்லதெனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அவற்றிலும் சோப் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்


  • குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். 
  • அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. 
  • துடைத்த பின் உடனடியாகவே ஈரலிப்பூட்டும் கிறீம், ஓயின்மென்ட் அல்லது லோசனைப் பூசுங்கள். இதனால் குளிக்கும் போது உங்கள் சருமத்தின் கலங்கள் பிடித்து வைத்திருக்கும் நிர்த் துளிகள் ஆவியாகி வெளியேறாது தடுக்கலாம்.

'குளித்த பின் குளிர் பிடிப்பதைத் தடுக்கும்' என சிலர் ஓடிக்கோலோன் போடுவது வழக்கம். இதில் எதனோலும் மணமூட்டிகளும் உள்ளன. இவையும் சருமத்தை அழற்சியடையச் செய்யக் கூடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. எனவே இவற்றையும் வரட்சியான சருமம் உள்ளவர்களும் அது வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உடைகள்


  • சருமத்திற்கு ஏற்றவை பெரும்பாலும் பருத்தி உடைகளே. அவை உங்கள் சருமத்திற்கான காற்றோட்டத்தைத் தடுப்பதில்லை. நைலோன், கம்பளி போன்றவை சருமத்திற்கு ஏற்றவையல்ல. 
  • உடைகளைக் கழுவும் போது கடுமையான அழுக்கு நீக்கிகள், கடும் வாசனை மற்றும் நிறமூட்டிகள் கொண்ட சோப், சோப் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையும் சருமத்திற்கு எரிச்சலூட்டி வரட்;சியாக்கலாம்.

வரட்சியான சருமத்தடன் அரிப்பும் ஏற்பட்டால் சாதாரண கிறீம் வகைகள் போதுமானதல்ல. ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் தேவைப்படலாம்.

ஆயினும் மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது. சருமம் சிவந்திருந்தால், தூக்கத்தையும் கெடுக்கக் கூடிய அரிப்பு இருந்தால், சருமத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களில் வலியிருந்தால் அல்லது கடுமையாக தோல் உரிந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண்பது மிகவும் அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Sunday, January 2, 2011

வரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும்

அம்மம்மா தினமும் தனது கால்களுக்கு நல்லெண்ணய் பூசுவது நினைவில் இருக்கிறது.

"ஏன் பூசுகிறீர்கள்" என்று கேட்டபோது 'பனிக்குக் கால் தோல் வெடிச்சுப் போகும். எண்ணெய் பூசினால் குளிர்மையாக இருக்கும்' என்பார்.

அன்று அவ்வாறு கூறியது எவ்வளவு அனுபவ பூர்வமானது என்பது இப்பொழுது புரிகிறது.


இருந்தபோதும் எம்மவர் மத்தியில் தமது சருமத்தைப் பேணுவதின் அவசியம் பற்றி அக்கறை இன்றும் கூட பரவலாக இல்லை.

அழகு சாதனங்களை முகத்தில் பூசுவது மட்டுமே போதுமானது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவை உடனடியாக அழகு படுத்துமே அல்லாமல் சருமத்தை பேணுமா என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

சருமம் என்பது முகத்தில் மட்டுமல்ல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ளது. அதனைப் பேணுவது அழகுக்காக மட்டுமல்ல எமது உடல் நலத்திற்கும் அவசியமானதாகும்.

எம்மவர்கள் பலர் குளிர் மூடிய மேலைத் தேசங்களில் வாழ்வதால் அவர்களுக்கு Dry Skin பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. அவர்கள் தமது உறவுகளுக்கு குளிர்ச்சியூட்டும் களிம்புகளை (moisturizing cream)அனுப்புவதால் இப்பொழுது இங்கும் அவற்றின் பாவனையும் விற்பனையும் சற்று அதிகமாகிறது.

வரட்சியான சருமங்கள் ஒரே விதமானவை அல்ல

சாதாரணமான வரட்சிச் சருமம் என்பது பிரச்சனையான விடயம் அல்ல. தாங்களாகவே சமாளிக்கக் கூடியது.

ஆனால் சற்று மோசமானால் தோல் தடித்து, சுருக்கங்கள் விழுந்து ஓணான் தோல் போல பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடும். ஆனால் பிறவியிலேயே சுருக்கமான சருமத்துடன் சிலர் இருப்பதுண்டு. இக்தியோசிஸ் (Ichthyosis) என்பார்கள். 


அழகைக் கெடுப்பது மாத்திரமின்றி உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இவர்கள் தமது சருமத்தைப் பேண வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வரட்சியான சருமம் என்பது காலத்திற்குக் காலம் வந்து மறையும் பிரச்சனையாகவே இருப்பதுண்டு.
சிலருக்கு எந்நாளும் தொடர்வதுண்டு.

நீரிழிவு நோயாளர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. பனிகாலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கால்கள், முன்னங்கை, வயிற்றின் பக்கங்கள் பொதுவாக வரட்சியாவது அதிகம்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் தமது தோல் சற்று இறுக்கமாக இருப்பதாக உணர்வர். இந்த இறுக்கமானது குளித்த பின் அதிகமாகத் தோற்றும்.

வழமையில் அது தனது ஈரலிப்பையும் மிருதுவான தன்மையையும் இழந்து சற்று சொரசொரப்பாக இருக்கும்.

காலகதியில் நுண்ணிய கோடுகள் விழுவதுடன் பின்னர் சருமத்தில் வெடிப்புகளும் வரலாம். மேலும் அதிகரித்தால் சிவத்து ஆழமாக வெடித்து இரத்தம் கசியவும் கூடும். அக்கறை எடுக்காவிடில் வெடித்த சருமத்தில் கிருமி தொற்றி சீழ் பிடிக்கவும் கூடும்.

ஏன் ஏற்படுகிறது

மிக முக்கிய காரணம் சீதோட்சண நிலைதான். குளிர் காலத்தில் சுற்றாடல் உஷ்ண நிலையும், ஈரலிப்புத் தன்மையும் தாழ்ந்திருக்கையில் சருமம் மிகவும் வரட்சியடைகிறது. ஏற்கனவே இப் பிரச்சனை இருந்தால் மேலும் மோசமடையும்.

சிலருக்கு உலகில் உள்ள அழுக்கு முழுவதும் தங்கள் உடலில் பட்டிருப்பதாக நினைப்பு. நீண்ட நேரம் குளிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் 'கிணறு வற்றப் போகுது' அல்லது 'வோட்டர் பில் ஏறுது' எனச் சொன்னாலும் காதில் விழுத்தாது குளிப்பர்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருந்தால் தோலுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் கொழுப்பு பாதுகாப்புக் கவசம் அகன்றுவிடும். தோல் வரட்சியடையும். அதே போல நீண்ட நேரம் நீச்சலடித்தாலும் நடக்கும்.

எனவே அழுக்கை அகற்றக் குளியுங்கள். அதற்காக எருமை போல தண்ணிரில் ஊற வேண்டாம்.

சோப் போடுவது அவசியம்தான். ஆனால் காரச் சோப்புகளும் கிருமி நீக்கி சோப்புகளும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிடிப்பையும், நீர்த்தன்மையையும் அகற்றிவிடும். வழமையாக நாம் பாவிக்கும் பல பிரபல சோப்புகளும் இதில் அடங்கும்.

எனவே தோல் வரட்சியுள்ளவர்களுக்கு என சோப் அல்லாத அழுக்கு நீக்கிகள் (Soap free Wash) கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாயினும் மிகுந்த வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு நிறையவே உதவும். பெரும்பாலான சம்பூ வகைகளும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன.

கடும் குளிர் கூடாது என்பது போலவே கடுமையான சூரிய ஒளியும் வெப்பமும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன. அதற்கு மேலாக சூரிய ஒளியில் உள்ள அல்ரா வயலட் கதிர்களாவன (UV Radiation)  மேல் தோலைக் கடந்து உட் தோலையும் பாதிக்கிறது. இதனால் ஆழமான சுருக்கங்கள் மட்டுமின்றி தோல் தொய்வடையவும் செய்கிறது.


சொரசிஸ் (Psoriasis) என்ற தோல் நோயும், தைரொயிட் சுரப்பிக் குறைபாட்டு நோய்களும் (Hypothyroidism) இதற்குக் காரணமாகின்றன.

பின்விளைவுகள்

வரட்சியான தோலானது எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சிக்கு முக்கிய காரணமாகிறது. அதன் போது தோல் அழற்சியுற்று, சிவந்து வெடிப்புகளும் தோன்றலாம். அரிப்புடன், நீர் கசியவும் கூடும்.

சிறிய சிறிய சீழ் கட்டிகள் (Folliculitis) தோன்றுவதற்கும் இதுவே காரணமாகிறது.


கிருமி தொற்றி அது உட்தோலுக்கும் அதற்குக் கீழ் உள்ள திசுக்களுக்கும் பரவுவது மிகவும் ஆபத்தானது. செலுலைட்டிஸ் (Cellulitis) எனப்படும் இதன் விளைவாக கிருமிகள் இரத்தத்திற்கும் நிணநீர்த் தொகுதிக்கும் பரவி முழு உடலையுமே பாதிக்கலாம்.


அடிக்கடி இவ்வாறு செலுலைட்டிஸ் (Cellelitis) வந்தால் தோலும் அதன் உட்புறமும் பாதிப்புற்று யானைக் கால் போல நிரந்தர வீக்கமாகிவிடுவதும் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment