Saturday, July 9, 2011

மலவாயிலில் சிறு தோல் வளர்த்திகள் (Anal Skin Tags)


மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது அதில் ஏதோ கட்டியாகத் தட்டுப்பட்டது.
மூல வருத்தமோ, வேறு ஏதாவது ஆபத்தான கட்டியாக இருக்குமோ எனப் பயந்து வந்தாள் ஒரு நோயாளி.


மலவாயிலில் அரிப்பாக இருக்கிறது என சொன்னார் மற்றொரு ஐயா.
பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு குதத்தை அண்டிய பகுதியில் சிறிய தோல் வளர்த்திகள் தென்பட்டன. (Anal Skin Tags) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


இவற்றின் தோற்றத்தில் பல மாறுபாடுகள் இருக்கக் கூடும். குறிப்பிட்ட ஒரு வடிவமாக இருக்காது. நீளமாக, உருண்டையாக, தட்டையாக, பெயரற்றவை எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். சதைக்கட்டி போலவும் இருக்கலாம்.

இவை காண்பதற்கு அரிதானவை அல்ல. பல நோயாளிகளுக்கு இருக்கின்றன. பலருக்கு அவ்வாறு இருப்பது தெரிந்திருப்பதில்லை.

இவை ஆபத்தானவை அல்ல. பொதுவாக எந்தத் துன்பத்தையும் கொடுப்பதில்லை. பேசா மடந்தைகளாக அடங்கிக் கிடக்கும். மிகச் சிலருக்கு அரிப்பு, வலி தோன்றலாம்.

பொதுவாக இவை குதம் சம்பந்தப்பட்ட வேறொரு நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது அதன் தொடர்ச்சியாக அல்லது பின்விளைவாக இருக்கும்.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • மலம் இறுகும்போதுஇ முக்கிக் கழிக்க நேரிடும். அவ்வேளையில் குதத்தில் சிறு உராய்வுகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காலகதியில் குணமாகும்போது அதில் சிறுதோல் வளர்ச்சியாக மாறும்.
  • அல்லது வெளியே இறங்கிய 'வெளிமூலம்'(External hemorrhoid)சரியான சிகிச்சையின்றி தானாகக் குணமடையும்போதும் அவ்விடத்தில் சிறு தோல்வளர்ச்சியாக வெளிப்படும்.
  • குதப் பகுதியில் முன்பு செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் விளைவாகவும் தோல் வளர்வதுபோலத் தோன்றும்.

வலி வேதனை எவையும் ஏற்படுவதில்லை ஆதலால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. தற்செயலாக மலம் கழுவும்போது அது இருப்பதை உணரக் கூடும்.

அவ்வாறான தோற்சிறு கட்டியுடன் வலியிருப்பதாக நோயாளி சொன்னால்; பெரும்பாலும் குதத்துடன் சேர்ந்த மூல வீக்கம், குத வெடிப்பு, போன்ற வேறு ஏதோ நோயும் சேர்ந்திருப்பதாகக் கருதலாம்.

இந்நோயுள்ளவர்கள் குதவாயிலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது பெரும்பாலும் ஒரு பக்கமாகவே கழுவுவோம்.

பெரும்பாலானவர்கள் குதத்தின் பின் பக்கத்தில் ஆரம்பித்து முன்னுக்கு வருமாறு தமது விரல்களைத் தேய்த்தே கழுவுவார்கள். இதனால் தோல் வளர்த்தியின் மறுபுறத்தில் மலம் சிறுதுணிக்கைகளாக அடையும் சாத்தியம் உண்டு. கட்டிகள் பல அவ்வாறான இருந்தால் சுத்தத்தைப் பேணுவது மேலும் சிரமமாகும்.

சுகாதாரக் குறைவு காரணமாக அவ்விடத்தில் அழற்சி ஏற்படும். இது அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு அடங்கச் சொறியும்போது புண்பட்டால் கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிலையை மோசமாக்கும்.

சிகிச்சை

எந்தவித பிரச்சனையும் இல்லாவிட்டால் அவ்வாறான தோற்சிறு கட்டிகளுக்கு யாதொரு சிகிச்சையும் அவசியமில்லை. அரிப்பு, வலி, சுகாதாரத்தைப் பேணுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை வெட்டி நீக்கிவிடலாம்.

அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி போட்டுவிட்டு சிறு சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். மருத்துவ நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிபெற்று நின்று செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலும் வெளிநோயாளியாகச் செய்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பக் கூடிய சாதாரண சிக்கிச்சையே இது.

வீக்கமடைந்த பப்பிலே (Enlarged Papillae) , வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி (Polyps), போற்றவையும் குதத்தருகே தோன்றக் கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியாக நோயை நிர்ணயிப்பது அவசியம்.

குத வெடிப்பு (Anal fissure)


பிஸ்டுலா (fistula) போன்ற கிருமித் தொற்றுள்ள மலக்குடல் சார்ந்த புண்களில்,

Fistula in ano
 அவற்றின் குத ஓரமான முனையை மூடி தோல் வளர்த்தி ஏற்படுவதுண்டு.  இதனை sentinel tag என்பார்கள். சற்று தீவிரமான அந்த அடிப்படை நோய்க்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவம் செய்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0


Post Comment

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு தரும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

விசரன் said...

நோய்கள் பற்றி நீங்கள் அறிவிக்கும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது. மிகவும் சிக்கலான,பேசப்படாத நோய்கள் பற்றி நீங்கள் கூறுவது இந் நோய்கள் பற்றி பலரும் அறிய உதவியாய் இருக்கும்.

உங்களின் நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும். ”மலவாயிலில் அரிப்பு இருக்கிறதா? அது பூச்சித்தொல்லை என்று சொல்ல முடியாது”

வாழ்த்துக்கள் டாக்டர்

நிரூபன் said...

வணக்கம் ஐயா, ஆசனவாயில் ஏற்படும் தோல் வளர்ச்சி பற்றிய விளக்கப் பதிவினை அருமையாகத் தொகுத்து- விழிப்புணர்வோடு தந்திருக்கிறீங்க.
இதுவரை நாளும் இந் நோய் பற்றி நான் அறிந்ததே இல்லை ஐயா.

பகிர்விற்கு மிக்க நன்றி.

தங்கம்பழனி said...

நல்ல பயனுள்ள மருத்துவ விழிப்புணர்வு பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி! பாராட்டுதல்கள்..!

Varatheeswaran Kajan said...

உங்கள் தகவல்களுக்கு நன்றிகள் !! ஆனால் மல வாயிலில் ஏற்படும் அரிப்புக்கு காரணம் நம் உடலில் உள்ள புழுக்கள் தான் காரணம் எனவும் நான் அதை சொரியும் போது அப்புளுக்களின் முட்டைகள் அது நமது விரல் இடுக்குகளில் ஒட்டி நான் சாப்பிடும் போது சாப்பாட்டுடன் உள்ளுக்கு போய் திரும்பவும் புழுக்களாக வளருகின்றன என்று எப்போதோ பேப்பரில் படித்த ஞாபகம்.. இதைப்பற்றிய உங்கள் கருத்து ?

agnrajan said...

"kaya kalpa" given by the great vethathiri maharishi is the best remedy for all kinds of the above problems. ok take care.

நிலாமதி said...

பலரும் வெளிபடையாக பேச சங்கடப்படும் விடயத்தை விளக்கமுடன் அறியததந்தமைக்கு நன்றி . மேலும்பல் படைப்புக்கள் தரவேண்டும்.விடுமுறை முடிந்து மீண்டும் உங்களுடன் நிலாமதி

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி Varatheeswaran Kajan. "..மல வாயிலில் ஏற்படும் அரிப்புக்கு காரணம் நம் உடலில் உள்ள புழுக்கள்..." அல்ல, குடலிலுள்ள thread worm ஒரு காரணம் மட்டுமே. மேற் கூறிய மலவாயிலில் சிறுதோல் வளர்த்திகள், மலவாயில் வெடிப்பு, மூலக்கட்டிகள், பிஸ்டியுலா, வீக்கமடைந்த பப்பிலே, வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி போன்ற பல காரணங்களால் ஏற்படுவது அதிகம். தோல் அழற்ச்சி மற்றொரு காரணம்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி. agnrajan. காயகல்பம் பற்றிய அறிவு எனக்கில்லை.
மருத்துவ ஆராச்சிகளால் பயன் உடையது என நிறுவப்பட்டவை பற்றியே என்னால் பேச முடியும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி நிலாமதி மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.

♔ம.தி.சுதா♔ said...

விளக்கமான பதிவுக்கு நன்றி ஐயா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

baappu said...

நல்ல பயனுள்ள பதிவு நன்றி! பாராட்டுதல்கள்..!

Raja said...

நல்ல பதிவு நன்றி!

Satkuru said...

நல்ல பயனுள்ள பதிவு நன்றி!

ஹேமா said...

இப்போதுதான் கவனிக்கிறேன் டாக்டர்.மிக மிகத் தேவையான பதிவு என் குடும்பத்தினருக்கு.இது பரம்பரை நோய் என்றும் சொல்கிறார்களே.எங்கள் தாத்தாவுக்கு இருந்ததாம்.இப்போ அவரைத் தொடர்ந்து 5-6 பேருக்கு இருக்கு எங்கள் குடும்பத்தில் இந்த நோய்!

Muruganandan M.K. said...

இல்லை ஹேமா. பரம்பரை நோயாக இருப்பதற்கச் சாத்தியங்கள் குறைவு. குடும்பத்தின் பொதுவான உணவுப் பழக்கங்கள் காரணமாக இருக்கலாம்.

venkatesh said...

"if a man does not
have a purpose
for living
then he is not
qualified to live"

என்ற மார்டின் லூதர் கிங்கின் வாக்குக்கேற்ப
தங்களுடைய வாழ்க்கைக்கு
இந்த பதிவுகள் மூலமும்
தாங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்வதன் மூலமும் பொருள் உள்ளதாய் ஆக்கிவிடீர்கள்..

தங்களுடைய சேவை தொடரட்டும்..
நன்றி.. நன்றி.. நன்றி..

venkatesh said...

"if a man does not
have a purpose
for living.
then he is not
qualified to live"..

என்ற மார்டின் லூதர் கிங்கின் வாக்குக்கேற்ப
தங்களுடைய வாழ்க்கைக்கு இந்த பதிவுகள் மூலமும்
தாங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்வதன்
மூலமும் பொருள் உள்ளதாய் ஆக்கிவிடீர்கள்..

தங்களுடைய சேவை தொடரட்டும்..
நன்றி.. நன்றி.. நன்றி..

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்