Friday, December 31, 2010

நலமான புத்தாண்டு

நோய் நொடி அண்டாத,
மருத்துவரும் பத்தியமும்
கசப்பான மருந்துகளும்
கிட்டவும் நெருங்காத
நலமான புத்தாண்டு
அனைவர்க்கும் கிட்டட்டும்
வாழ்த்துகிறேன்.


எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Sunday, December 26, 2010

பாலுண்ணிகள்- வைரஸ் வோர்ட் (Virus Warts)

வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.


என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.



இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.


16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.


பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.

சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
  
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்


 மோகத்தால் வந்ததா? - வைரஸ் வோர்ட் (Virus Wart) 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Sunday, December 19, 2010

சும்மா இருக்கச் சுகம் வராது! மரணம் வரும்

“சும்மா இருக்கச் சுகம் வரும்” என்றார்கள் ஞானிகள்.


“சும்மா இருந்தால் மரணம் விரைந்து வரும்” என்கிறார்கள் இன்றைய ஞானிகளான விஞ்ஞானிகள்.

எது சரி?

அதீத எடையும் கொழுத்த உடலும் இன்று கொள்ளை நோயாக மனித குலத்தை ஆட்டுவிக்கிறது. அதீத எடைக்கு முக்கிய காரணம் போதிய உடலுழைப்பு இல்லாமையாகும்.

சும்மா உட்கார்ந்திருப்பது என்பது உடலுழைப்பற்ற செயலாகும். எனவே அதிக நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது உடல் உழைப்பின் நேரத்தைக் குறைக்கிறது.


மாறாக குறைந்த நேரம் உட்கார்ந்திருப்பதானது கொழுத்த உடலினால் ஏற்படும் உடற் செயற்பாட்டியல் பாதிப்புகளைக் (metabolic consequences) குறைக்கும் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

எடை குறைப்பது பற்றிய எனது முன்னைய கட்டுரை படிக்க
எடை குறைப்பு - மருந்துகள் உதவுமா?

இது அமெரிக்க புற்று நோய் சங்கத்தினால் செய்யப்பட்ட ஆய்வாகும். நோயற்ற ஆரோக்கியமான 53இ440   ஆண்களையும்  69776 பெண்களையும் உள்ளடக்கிய பாரிய ஆய்வு இது. 14 வருடங்கள் தொடரப்பட்டது.

இதன் படி தினமும் 3 மணிநேரத்திற்கு குறைவாக சும்மா இருப்பவர்களை விட தினமும் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பவர்களுக்கு மரணத்திற்கான சாத்தியம் அதிகரிக்கிறதாம். அது ஆண்களில் 1.17 சதவிகிதமும், பெண்கனில் 1.34 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.

அதே நேரம் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பதுடன் மிகுதி நேரங்களில் உடலுழைப்புக் குறைந்திருப்பர்களுக்கு, குறைந்த நேரம் சும்மா இருப்பதுடன் அதிக உடலுழைப்பு செய்பவர்களுடன் ஒப்பிடும்போது மரணத்திற்கான சாத்தியம் ஆண்களில் 1.48 சதவிகிதமும், பெண்களில் 1.94 சதவிகிதமும் அதிகரிக்கிறது.

சும்மா இருப்பவர்களின் மரணத்திற்கான அதிகரிப்பானது அதீத எடை, புகைத்தல் போன்ற மரணத்திற்கான ஏனைய காரணங்களைக் கணக்கில் கொண்டபோதும் அதிகமாகவே இருந்தது.

அத்துடன் ஓரளவு உடலுழைப்பு இருந்தபோதும் சும்மா இருக்கும் நேரம் அதிகமாக இருந்தாலும் ஏனையவர்களை விட மரணம் நெருங்கி வரும்.

அவர்களில் மரணத்திற்கு, பொதுவாக மாரடைப்பு, மூளையில் இரத்த குழாய் வெடிப்புப் போன்றவையே காரணமாக இருந்திருக்கின்றன.

எனவே இந்த ஆய்வு கொடுக்கும் முடிவானது என்ன? குறைந்தளவு நேரமே சும்மா உட்காரந்திருங்கள். கூடியளவு நேரம் உற்சாகமான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் என்பதுதானே.

அப்படியானால் ஞானிகள் சொன்னது தவறா?

இல்லை!

ஞானிகளின் இலக்கு விரைவில் வீடு பேறடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதாகும். எனவே சும்மா இருப்பது அவர்கள் தங்கள் இலக்கை விரைவில் அடைய அது உதவும். அதாவது மரணித்து இறைவனை அடைய.

ஆயினும் இவ்வுலகில் நீண்டு வாழ்வதில் விருப்பமும், மகிழ்ச்சியும் அடையும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஏற்றது
  • குறைந்த நேரம் சும்மா இருத்தலும் 
  • கூடிய நேரம் உடலுழைப்பில் ஈடுபடுவதும்தானே.

சும்மாயிருத்தல் பற்றிய தாயுமானவர் பாடல்

 ”சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

"இடக்குப் பேச்சுப் பேசாதே, ஞானிகள் உடற் சுகத்தைப் பற்றிப் பேசவில்லை. உள்ளத்தை அமைதியாக சுகமாக தேவையற்ற வீண் சிந்தனையின்றி வைத்திருப்பதைப் பற்றியே சொன்னார்கள்"

என நீங்கள் சொன்னால் அதை மறுதலிக்கும் இலக்கிய ஆன்மிக ஆற்றல் என்னிடம் இல்லை.

அதீத எடை பற்றிச் சற்றுச் சிரிப்போடு சிந்திக்க எனது
"steth இன் குரல்" மற்றும்
"மறந்து போகாத சில.."
பதிவுகளைப் பார்க்கவும். 




நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 28.10.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

பிகு

சும்மா இருக்காதே எனச்


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, December 12, 2010

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள் - வெள்ளைபடுதல்

பெண்களே! வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்

மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.

"இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்....
சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்...பசியும் குறைவு...."
நேரடியாக விடயத்திற்கு வராது சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள் அம்மா.

சற்று மெல்லிய தோற்றம் கொண்டவளாயினும், மகளின் முகத்தில் நோயின் வாட்டம் தென்படவில்லை. அழகாக, திரட்சியாக பதின்ம வயதுகளின் கவர்ச்சியுடன் தோன்றினாள்.

மகளிலிருந்து கண்ணை விலக்கி அம்மாவில் பார்வையைப் பதித்தேன். சற்று முன் நகர்ந்த அம்மா தனது குரலைத் தாழ்த்தி.....

"இவளுக்கு சரியா வெள்ளை படுகுது. உருகிக் கொண்டு போறாள்."

வெளிப்படையாகப் பேசுங்கள்.

இவர்கள் சற்று வெட்கப்பட்டவர்கள். காலம் மாறிவிட்டது.
இன்றைய இளம் பெண்கள் பலர் தாயின் துணையின்றித் தனியாகவே வந்து தங்கள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள்.

தன்னம்பிக்கை வளர்ந்து விட்டது.
திருப்தியடையக் கூடிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலியல் உறுப்புகளில் அரிப்பு, வேறுநோய்கள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், பாலுறவின் போது ஏற்படக் கூடிய உடல் உளப் பிரச்சனைகள் என எதுவானாலும் மருத்துவருடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது பொருந்தும்.

வெள்ளைபடுதல்

இந்த வெள்ளைபடுதல் என்பது பெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில் சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவு எனலாம்.


பெண் பாலுறுப்பிலிருந்து சற்றுத் திரவம் கசிவது இயற்கையானது. வாயிலிருந்து எச்சில் ஊறுவது போன்றது.
வாய் எந்த நேரமும் ஈரலிப்பாக இருப்பதற்குக் காரணம் எச்சில்.

அதேபோல பெண்ணுறுப்பு அதன் சுரப்புகள் காரணமாக எப்பொழுதும் ஈரலிப்பாக இருக்கும்.

  • கிருமிகள் தொற்றாதிருக்கவும்,
  • உடலுறவின் போது இன்பம் அளிக்கவும்,
  • மகப்பேற்றின் போது துணையாக இருப்பதற்கும் இது அவசியம்.
எனவே குழந்தை பெற்றெடுக்கக் கூடிய வயதுகளில் மிகவும் அவசியமானது. விசனிக்க ஏதும் இல்லை.

உணவில் ஆசை ஏற்பட்டால் எச்சில் அதிகம் ஊறும்.
அதேபோல பாலுணர்வு மேலெழும்போது யோனியிலிருந்து சுரப்பது அதிகமாகும்.

பதின்ம வயதுகளில் பாலியல் உணர்வுகள் மெருகேறும்போது பையன்கள் தங்கள் ஆண்குறிகள் திடீர் திடீரென விறைப்படைவது கண்டு வியப்பிற்கும் குற்ற உணர்விற்கும் ஆளாவது போலவே பெண்பிள்ளைகளும் இந்த வெள்ளை படுதலைக் கண்டு அசூசை அடைகிறார்கள்.


தாய்மார் தங்கள் இளமை நினைவுகளை மீளநினைத்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பது முக்கியமாகும்.
ஆயினும் பல நோய்களாலும் யோனியிலிருந்து திரவம் கசியக் கூடும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சாதாரண வெள்ளைபடுதல்


சாதாரண வெள்ளை படுதல் என்பது சற்று வழவழப்பான எச்சில் போன்ற தெளிவான திரவமாகும்.
பிறப்பு உறுப்பில் உள்ள கருப்பைக் கழுத்திலிருந்து பெருமளவு சுரக்கும். அதேபோல யோனியின் சுவர்களிலிருந்தும் கசியும்.

சுரக்கும் போது இது வெண்மையாக இருந்தாலும் காற்றுப்பட்டதும் சற்று மஞ்சள் நிறமாகலாம்.
அதேபோல உள்ளாடைகளில் பட்ட பின்ரும் நிறம் மாறலாம்.
உடலிலுள்ள பெண்ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜின் இதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வழமையாக ஓரளவு இருக்கும் இந்த வெள்ளைபடுதல் மனஅழுத்தங்களின் போது சற்று அதிகரிக்கலாம். ஏனைய மன அழுத்தங்கள் போலவே வெள்ளை படுதல் பற்றிய பய உணர்வும், அசூசை ஆகியவை உள்ளதை மேலும் மோசாமாக்கிவிடும்.

பல இளம் பெண்கள் மாதவிடாய்க்கு இடைப்பட்ட சில தினங்களில் இது அதிகமாவதை அவதானித்திருப்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் நேரத்தில் இவ்வாறு கூடியளவு வெள்ளைபடலாம்.

கருவுற்று இருக்கும் காலங்களிலும் வெள்ளைபடுவது அதிகரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் ரிதியான உணர்வுகள் கிளறும்போதும் வெள்ளை படுதல் அதிகரிக்கும்.

வேறு நோய்கள் காரணமாக

தொற்று நோய், புற்றுநோய், ஒவ்வாமை போன்ற பல காரணங்களலும் வெள்ளை படுதல் ஏற்படலாம்.
நீரிழிவு இருந்தால் பங்கஸ் தொற்று நோயாலும் தோன்றலாம்.

ஆனால் இவற்றின்போது பெரும்பாலும் அரிப்பு, எரிவு, கெட்ட மணம், போன்றவை சேர்ந்திருக்கும்.

நோய்கள் காரணமா?

வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதற்கு உரிய அறிகுறிகள் என்ன?

  • இதுகாலம் வரை இல்லாதவாறு திடீரென அதிகரிக்கும் வெள்ளைபடுதல்
  • அதன் நிறத்தில் மாற்றம்
  • அதன் மணத்தில் திடீரென ஏற்படும் மாற்றம்.
  • பெண் உறுப்பிலும் அதனைச் சுற்றியும் எரிவு, சினப்பு, அரிப்பு போன்றவை தோன்றுதல்.
  • மாதவிடாய் இல்லாத தருணங்களில் வெள்ளையில் இரத்தக் கறையும் தென்படல்.
வெள்ளையுடன் இரத்தக் கசிவும் சேர்ந்திருந்தால் புற்றுநோயாகவும் இருக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகம் ஏற்படும்.

நீங்கள் செய்யக் கூடியவை என்ன?

உங்கள் பாலுறுப்பை சுத்தமாகவும் ஈரலிப்பு இன்றியும் வைத்திருங்கள்.

பல பெண்கள் உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் தமது உறுப்பைச் சுத்தமாக வைத்திருப்பதாகக் கூறி நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவார்கள்.

இது தவறான முறை. அவ்வாறு செய்யும்போது பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடும்.

மாதவிடாய் நேரங்களில் பாட்ஸ் (Pads) மட்டுமே உபயோகியுங்கள்.

உள்ளே வைக்கும் டம்புன்ஸ் (Tampons) கூடவே கூடாது



உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தித் துணியால் ஆனதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
சில்க், நைலோன் போன்றவை ஈரத்தை உறிஞ்ச மாட்டாது.
அத்துடன் வியர்வையையும் உறிஞ்சமாட்டாது.
காற்றோட்டத்தையும் தடுக்கும். இவை காரணமாக அரிப்பும் தொடர்ந்து கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அத்துடன் மிக இறுக்கமான உள்ளாடைகளும் கூடாது.

பாலுறுப்பை அண்டியுள்ள பகுதிகளில் வாசனை ஸ்ப்ரே, பவுடர் போன்ற பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம்.

ஈஸ்ட் கிருமித் தொற்று இருந்தால் லட்டோ பசிலஸ் உள்ள யோகட், தயிர் போன்றவற்றை உண்பது நல்லது. கடுமையான அன்ரிபயரிக் உபயோகிக்கும் போதும் ஈஸ்ட் தொற்றுதைத் தடுக்க உண்ணலாம்.

பாலுறவின்போது ஆணுறை உபயோகிப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு இருந்தால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் கட்டுப்படுத்தி வையுங்கள். இல்லையேல் பங்கஸ் கிருமித்தொற்றும் ஏற்படும்.

எப்பொழுது டொக்டரிடம்

வெள்ளை படுதலுடன் காய்ச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் கட்டாயம் மருத்துவரைக் காண வேண்டும்.

நீங்கள் உடலுறவு கொண்டவருக்கு சிபிலிஸ், கொனரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இருந்திருக்கலாம் என சற்று சற்தேகம் இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

வெள்ளை படுதலுக்கு மேலாக பாலுறுப்புப் பகுதியில் அரிப்பு, சிறிய கொப்பளங்கள், புண் போன்றவை இருந்தால் நிச்சயம் மருத்துவ உதவி அவசியம்.

எனவே வெட்கத்தை விட்டொழியுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பேண உங்கள் மருத்துவருடன் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதி வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, December 5, 2010

இதுவம் ஒரு வகை தோல் நோய் - நுமலர் எக்ஸிமாNummular eczema

இந்த நோயாளியன் கால்களில் கரி அப்பியதுபோல கறுத்தத் திட்டுத் திட்டுகளாக கால்கள் இரண்டிலும் இருக்கிறது. அவற்றில் கடுமையான அரிப்பும் இருக்கிறது. நீண்ட நாட்களாக மாறாது இருக்கிறது என்றார்.

இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.

வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.


லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.

காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்.

பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்.


வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.

இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.

பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.

ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.

இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.

அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.

இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.

இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி வாரவெளியீடு 05.12.2010 ல் வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0.0

Post Comment