Sunday, August 15, 2010

கர்ப்பணிகள் கர்ப்பம் தரிக்கவிருக்கும் பெண்கள் - போலிக் அமிலம்அவசியம்

கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.

போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை விட்டமின் ஆகும்.



எத்தகைய பாதிப்பு

இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.

இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.

இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.

அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.

ஏன் குறைபாடு ஏற்படகிறது

எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.

அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.

குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.

இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.

ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?

கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே  ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது.  குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால்  இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.

எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.

எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.

காணொளியில் காணுங்கள்

கீழே ஒரு வீடியோ. போலக் அமிலம் பற்றியும், கரப்பகாலத்தில் அதை உட்கொள்வதன் மூலம் தனது நலத்தையும் வளரும் கருவின் நலத்தையும் பேணுவது பற்றியது.

நன்றி:- March of dimes இன் Healthy Pregnancy, Healthy Baby: Folic Acid for Women





மேலதிக தகவல்களுக்கு

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் 'போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?' என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.


தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

Post Comment

Sunday, August 1, 2010

பாலுட்டும் தாய்மார் என்ன சாப்பிட வேண்டும்.

பாலுட்டும் தாய்மார் என்ன சாப்பிட வேண்டும்.

தாம் உண்ண வேண்டியது என்ன என பாலுட்டும் தாய்மார் கேட்கும்போது இரண்டு விடயங்களை மனதில் வைத்தே கேட்கிறார்கள்.
  • குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிக்குமாக தாய் என்ன விசேட உணவுகளை உண்ண வேண்டும்
  • தனது உடல் நலத்தைப் பேணுவதற்காகத் பாலுட்டும்போது தாய் விசேடமாக உண்ண வேண்டியவை எவை?.

இவ் இரண்டு கேள்விகளுக்குமான விடை சுலபமானது.
  1. முதலாவதாக, குழந்தையின் நலத்தைப் பேணுவதற்காக நீங்கள் எதையுமே மேலதிகமாகவோ விசேடமாகவோ உண்ண வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணினால் போதுமானதாகும். உங்கள் உடலானது உங்கள் குழந்தைக்கு வேண்டியதைத் தானாகவே சுரந்துவிடும். 
  2. இரண்டாவதாக, நீங்கள் இப்பொழுது ஒரு குழந்தைக்குத் தாய். அதற்குப் பாலாட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கு மேலாக உங்கள் குழந்தையைப் பராமரிக்கிற பணியும் மேலதிகமாக வந்திருக்கிறது. அது மகிழ்ச்சியான பணியான போதும் சற்றுக் கடினமானதும் கூட. 

அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம்
உங்கள் உடலை,
அதன் ஆரோக்கியத்தை,
அதன் போசாக்கைக் கவனிப்பது அவசியமாகும்.

சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நல்ல உணவாக உண்பதுதான்.
நல்ல உணவு என்பது விலையுயர்ந்த உணவுகள் அல்ல.
போசாக்குள்ள உணவு.
இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு.


அதாவது உங்கள் உணவில்
  • மாப்பொருள், 
  • புரதம், 
  • கொழுப்பு, 
  • விட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள், 
  • கல்சியம் இரும்புச் சத்து போன்ற தாதுப்பொருட்கள் யாவும் தேவையான அளவில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
உண்ண வேண்டியவை
  • சோறு இடியப்பம், புட்டு, நூடில்ஸ், அப்பம், உருளைக்கிழங்கு போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் மாப்பொருள் கொண்டவையே. இவையே எமது உணவின் பிரதான கூறு ஆகும். அளவோடு அவசியம் சாப்பிட வேண்டிய உணவு வகையாகும்.
  • காய்கறிகள் பழவகைகள். அனைத்துக் காய்கறிகளும் நல்லவையே. வெண்டிக்காய் குளிர், தக்காளி கிரந்தி, பயிற்றங்காய் வாய்வு என்றெல்லாம் பத்தியம் பார்க்காது அனைத்தையும் மாறி மாறி உண்ணுங்கள். கறியாக சமைத்தும் சாப்பிடலாம். சலட் ஆகவும் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாசிபழம் ஆகாது என்று சிலர் கருதுவது தவறானது.

  • குழந்தை பிறந்திருக்கும் காலத்தில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. மலத்துடன் இரத்தம் போவது, மலம் வெளியேறும்போது வலிப்பது போன்ற சிக்கல்கள் இதனால் தொடரும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்க நார்ப்பொருள் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். தவிட்டு அரிசி, கீரை, மற்றும் பயறு, சோயா, போஞ்சி பயிற்றங்காய் போன்ற அவரையின காய்கறிகளையும் அவசியம் சேர்க்க வேண்டும்.
  • புரதச் செறிவுள்ள முட்டை, மீன், கோழியிறைச்சி, பால் போன்றவற்றைத் தவறாது சேர்க்க வேண்டும். பாலூட்டும் காலத்தில் மீன் சாப்பிட்டால் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன. மேலே குறிப்பிட்ட அவரையின உணவுகளிலும் புரதம் அதிம் உண்டு என்பது நீங்கள் அறிந்ததே.
  • பால், தயிர், யோகொட் போன்றவற்றில் புரதம் மட்டுமின்றி கல்சியம் சத்து இருப்பதால் சேர்ப்பது அவசியம்.
  • போதிய நீர் அருந்துங்கள். பழச்சாறுகள், மோர், இளநீர் போன்றவற்றை அருந்தலாம். வயிறு பெருக்கும், வயிற்றுப் புண் காயாது என்று சொல்லி மகப் பேற்றுன் காலத்தில் நீர் அருந்துவதைக் குறைப்பது தவறான செயலாகும். போதிய பால் சுரப்பதற்கும், சிறுநீர்த் தொற்று நோய்கள் ஏற்படாதிருக்கவும் போதிய நீராகாரம் அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளனவா?

மீன் சாப்பிட வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு ஏஜென்சியான (US Enviromental Agency) பாதரசம் அதிகமுள்ளதால் சில வகை மீன்களை கர்ப்பமாயிருக்கும் போதும், பாலூட்டும் காலத்திலும் அளவோடு உண்ண வேண்டும் என்கிறது.

Sword fish, King Mackerel, or Tile Fish  ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறது.

அதே நேரம் ஒரளவு பாதரசம் மட்டுமுள்ள Shrimp, Canned Light Tuna, Salmon, Pollock, and Cat Fish போன்வற்றை வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் அளவோடு உண்ணும்படி சிபார்சு செய்கிறது.

கபேன் அதிகமுள்ள பானங்களை அதிகம் குடிக்க வேண்டாம்.
தேநீர், காப்பி, கொக்கோ போன்றவற்றில் அதிகம் உண்டு. பல மென்பானங்களிலும் உண்டு.
அதேபோல சொக்கிளற்றிலும் அதிகம் உண்டு.


தாய்பால் ஊடாக குழந்தைக்கு கபேன் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக குழந்தையை தூங்கவிடாது அதிக நேரம் விழித்திருக்க வைக்கும். எனவே வழமையாக அருந்துவதைத் தவிருங்கள். எப்போதாவது அருந்தினால் தவறில்லை.

மது அருந்துவது கூடாது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஆயினும் கர்ப்பமாயிருக்கும்போது மது அருந்துவது கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. தாயிலிருந்து குழந்தைக்கு தாய்ப்பால் ஊடாக மது செல்வது குறைந்த அளவில்தான்.

கச்சான் (Peanut) ஒவ்வாமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆயினும் பால் ஊட்டுவதால் குழந்தைக்கு பிற்காலத்தில் பீநட் ஒவ்வாமை ஏற்படும் என்பதற்கு திடமான ஆதாரங்கள் கிடையாது. எனவே குழந்தைக்கு கிரந்தி என்று சொல்லித் தவிர்க்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் நலத்திற்காக உட்கொள்ள வேண்டாம்.
0.0.0.0.0.0

Post Comment