Sunday, April 25, 2010

மாரடைப்பும் பெண்களும்


'களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ...' என்றார் உள்ளே நுழைந்தவர்;.

தொடர்ந்து 'இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு' என்றும் சலித்துக் கொண்டார்.

வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.
மெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.
சற்று இளைப்பதும் தெரிந்தது.
நோயுற்றதால் களைப்படைந்திருந்தாள்.

நோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன?

அவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ  வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.

நான் விபரமாகக் கேட்டபோதுதான்
காலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.

பரிசோதித்தபோது,
இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
பிரஷர் சற்றுக் குறைந்திருந்தது.
ஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.
ஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை
மாரடைப்புத்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

மாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.

ஒரு வேளை அவள் மரணித்திருந்தால்?

பின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.

'அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை'
என நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்


கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?

பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை


பெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.


அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி

பெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்

போதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?

பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.


அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.


உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின்  மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Wednesday, April 14, 2010

பொங்கல் மற்றும் விதைகள் (Nuts) - சில பயனுள்ள தகவல்கள்

பொங்கல் எமது பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. தைப்பொங்கல் போலவே பலருக்கும் சித்திரை வருடப்பிறப்பும் மற்றொரு பொங்கலாகும்.
  
பொங்கல் 

அதற்கு மேலே புதூர் நாகதம்பிரான் பொங்கல், நாச்சிமார் பொங்கல், பண்டித்தலைச்சி அம்மன் பொங்கல், வற்றாப்பளை அம்மன் பொங்கல், மந்திகை கண்ணகி அம்மன் பொங்கல் என ஊருக்கு ஊர் வருடா வருடம் வேறு பல பொங்கல்களுக்கும் குறைவில்லை.


சிங்களவர்களுக்கு திருநாள் என்றால் கிரிபத் என்பது போல எங்களுக்குப் பொங்கல் எனலாம்.

சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல், வெண்பொங்கல் எனப் பலவகைப்படும்.


பொங்கலில் என்ன சேர்த்து இருக்கிறார்கள்?

பச்சை அரிசியுடன் பசுப்பால் அல்லது தேங்காய்ப் பால், இவற்றுடன் வறுத்த பயறு, ஏலக்காய், நெய் ஆகியனவும் சேர்த்துக் கொள்வார்கள்.



கஜீ - முந்திரிப் பரும்பு (Cashew Nut)

அவற்றிற்கு மேல் முக்கியமான பொருள் ஒன்று சேர்ப்பார்கள். அதுதான் கஜூ எனப்படும் முந்திரிப் பருப்பு. சிலர் முந்திரிப் பருப்புக்குப் பதிலாக மணிலாப் பருப்பு சேர்ப்பார்கள்.

கஜூ என்பது ஒரு விதை.

விதைகள் எமது உணவின் ஒரு ஆரோக்கியமான அம்சமாகும். அவை எமது இருதயத்திற்கு நன்மை பயப்பவையாகும். எந்த விதை என்றிலை எல்லா விதைகளுமே போசாக்குப் பொருட்களை அடர்த்தியாகக் கொண்டுள்ளன.

நீங்கள் ஒரு இருதய நோயாளியாயின் வேறு நொறுக்குத் தீனிகள் தின்பதை விட விதைகளை உண்பது நன்மை பயக்கும்.


விதைகளின் நல்ல பயன்கள்

விதைகள் எவ்வாறு இருதய நோயாளர்களுக்கு நன்மை செய்கின்றன?

கெட்ட கொலஸ்டரோலைக் குறைக்கும்

எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலில் LDL என்றொரு கூறு உண்டு. இதனை கெட்ட கொலஸ்டரோல் என்பர். ஏனெனில் இது குருதிக் குழாய்களில் படிந்து குருதிச் சுற்றோட்டத்தை குறையச் செய்யும். அதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

தமது உணவின் ஒரு கூறாக விதைகளை தினமும் உண்பவர்களுக்கு LDL கொலஸ்டரோல் அளவு குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களை விதைகள் குறைக்கின்றன எனலாம்.

குருதி உறைதலைக் குறைக்கும்

அதேபோல குருதி உறைதலைக் குறைக்கும் ஆற்றலும் விதைகளுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இருதயத்தின் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் பக்கவாதம்
(Stroke) ஏற்படுவதை நாம் அறிவோம். 
 
எனவே உயிராபத்தை ஏற்படுத்தும் இந்நோய்களை விதைகள் குறைப்பதாகக் கொள்ளலாம்

குருதிக் குழாய்களின் உட்சுவரில் உள்ள கல அமைப்பை (endothelium) என்போம். இந்த என்டோதிலியம் ஆரோக்கியமாக இருந்தாலும் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். விதைகளில் உள்ள போசாக்குப் பொருட்கள் (endothelium function) அதை நல்நிலையில் பேணுவதாகவும் தெரிகிறது.

விதைகளில் உள்ள எந்தப் பொருட்கள் காரணமாகின்றன?

விதைகளில் உள்ள பல் விற்றமின்களும், நல்ல கொழுப்புகளும் நார்ப் பொருள் போன்ற பலவும் ஆரோக்கியத்திற்கு நல்லன.

நிரம்பாத கொழுப்பு அமிலங்கள்

விதைகளில் நல்ல கொழுப்பு அமிலங்கள் (Monounsaturated and polyunsaturated fats) அதிகளவு இருக்கின்றன. இவையே குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோலைக் குறைப்பதாக நம்பப்படுகிறது.

ஒமேகா கொழுப்பு அமிலம்


ஒமேகா கொழுப்பு அமிலம் (Omega-3 fatty acids) என்பது எமது இருதயத்திற்கு நல்லது. 
மாரடைப்பு வருவதைக் குறைப்பதுடன், 
இருதயத்தின் துடிப்பு லயத்தைப் (Heart rhythms) பேணுவதற்கும் மிகவும் உதவுகிறது. 
 
இது பொதுவாக ஆழ்கடல் மீன்களில் இருக்கும். தாவர வகைகளில் குறைவு. ஆயினும் விதைகளில் இருப்பதால், மீன் சாப்பிடாதவர்களுக்கு உதவும்.

நார்ப் பொருள்

விதைகளில் நார்ப் பொருள் குறிப்படத்தக்க அளவில் உண்டு. நார்ப் பொருட்களானது எமது வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் தேவையற்ற மேலதிக உணவு உண்பதைத் தவிர்க்க உதவுகிறது. அத்துடன் கொலஸ்டரோல் நீரிழிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

விற்றமின் ஈ
(Vitamin E)

பலரும் இப்பொழுது விற்றமின் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இது இரத்தக் குழாய்கள் தடிப்படைந்து மாரடைப்பு வருவதைத் தடுக்கும் என நம்பப்பட்டதே காரணம். ஆயினும் இயற்கையாக உணவுகளிலிருந்து கிடைக்கும் விற்றமின் ஈ மட்டுமே இவ்வாறு உதவுகிறது. செயற்கையாக மாத்திரைகளால் கிடைப்பவற்றிலிருந்து அல்ல. விதைகளில் விற்றமின் ஈ கிடைக்கிறது.

ஸ்டெரோல்
விதைகளில் ஸ்டெரோல் (Plant sterols) என்ற பொருள் கிடைக்கிறது. இது ஏனைய பல தாவர உணவுகளிலும் கிடைக்கிறது. இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவை இதுவும் குறைக்க உதவுகிறது.

எவ்வாறு உண்பது?

விதைகளை வறுத்துச் சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது கூடாது.

விதைகளில் அதிக அளவு கொழுப்பு இருக்கிறது. உண்மையில் 80% அளவுக்கு இருக்கிறது. இது பெரும்பாலும் நல்ல கொழுப்பு என்ற போதும், கொழுப்பு காரணமான அதிக கலோரி இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே விதைகள் நல்லவையான போதும் அளவோடு உண்பது அவசியம். இறைச்சி, பால், பட்டர், முட்டை போன்றவற்றிலிருந்து பெறும் கொழுப்பிற்கு மாற்றீடாக அதை விதைகளிலிருந்து பெற்றால் நல்லது என்பேன்.

ஒரு சிறங்கை அளவு(சுமார் 45கிராம்) பாதாம் பருப்பு, கச்சான், பிட்சா பருப்பு, பைன்நட், வோல்நட், பீகன்ஸ், போன்ற விதைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக் குறையும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (FDA) கூறுகிறது. 
 
ஆயினும் இது ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் ஓரு அங்கமாக இருக்க வேண்டும். ஏனைய பால் மற்றும் இறைச்சி வகை கொழுப்புகளைக் கட்டுப்படுத்தாது வெறுமனை விதைகளைச் சாப்பிடுவதால் பயனேதும் இல்லை.

எந்த விதை நல்ல விதை


விதைகளில் எந்த விதை நல்லது என்று கேட்டால் எல்லாமே நல்லதுதான்.

கச்சான் என்பது உண்மையில் விதையில்லை. அது பயறு, பயிற்றை போல ஒரு அவரை இன உணவுதான். ஆயினும் ஒப்பீட்டு ரீதியில் பாரக்கும் போது அதுவும் ஆரோக்கியமானதே.

ஆயினும் தேங்காய் Coconut என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட போதும் அது பழமே அன்றி விதையல்ல.

அதில் இருதயத்திற்கு ஆரோக்கியமான நன்மைகள் எதுவும் இல்லை. எனவே தேங்காய், தேங்காயப் பால், தேங்காயெண்ணெய் போன்றவற்றை குறைவாகவே உபயோகிப்பது நல்லது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.

ஆனால் விஞ்ஞான ரீதியாக இதனை மறுதலிப்பவர்களும் உளர்.

சரி மீண்டும் பொங்கலுக்கு வருவோம். பொங்கல் ஆரோக்கியமான உணவா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 
 
கஜூ, பயறு போன்றவை இருந்தபோதும் சர்க்கரை, கற்கண்டு, பசுப்பால், தேங்காய்ப்பால், நெய் போன்றவை அதிகமாகச் சேர்க்கப்படுவதால் ஆரோக்கிய உணவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் கொழுப்பும் இனிப்பும் அதிகம் உண்டு.

ஆயினும் முற்றாகத் தவிர்க்க வேண்டியதும் இல்லை.

பண்டிகை உணவாக விசேட தினங்களில் மட்டும் அளவோடு சாப்பிட்டால் ஆபத்து அதிகமில்லை.

வெண்பொங்கலை பல காய்கறிகளும் சேர்த்த சாம்பாருடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.  
 
வெண்பொங்கலுக்கு தேங்காய்ப் பால் சேர்க்கப்பட்டாலும் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள்கள் அவற்றை ஆறுதலாகச் சமிபாடடையச் செய்வதால் ஓரளவு சமடையச் செய்கின்றன. அத்துடன் விற்றமின்களும் அதிகம் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

இருக்கிறம் சஞ்சிகையிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, April 11, 2010

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV

அண்மையில் எனது ஹாய் நலமா? இணைய புளக்கில் ஒரு படம் போட்டிருந்தேன். இளைஞனும் யுவதியும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் படம். அது தொடர்பாக எனக்குப் சில ஈ மெயில்கள் ஒரு சில பின்னூட்டுகளும் கேள்விகளாக வந்திருந்தன.

காரணம் வேறொன்றும் இல்லை நான் அதற்குக் கொடுத்த விளக்க வாசகம்தான். அது பலரையும் யோசிக்க வைத்துவிட்டது.

எதிர்மாறாக மற்றொரு மரியாதைக்குரிய மனிதர் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
அவரது கையில் ஒரு மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை
ரிப்போட் இருந்தது.
நல்ல காலம் இது நெகட்டிவ் ஆக இருந்தது.

இரண்டுமே எயிட்ஸ் பற்றியவைதான்.

அவருக்கு மணஉறவுக்கு அப்பால் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கணவன் ஊரோடு இல்லாதது இவருக்கு வாசியாகிவிட்டது.
இடையிடையே தாகம் தணித்துக் கொள்வார்.

ஆயினும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஆணுறை உபயோகிக்கத் தவறுவதேயில்லை.

நண்பர் ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். முத்தமிடும் போதும் தொற்றுமென!


"நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டுமின்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடுவதால் தொற்றும்" என இணையப் படத்தில் வாசகம் எழுதியதற்காகவே என்னிடம் சந்தேகம் தீர்க்கப் பலர் தொடர்பு கொண்டார்கள்.

அக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்

உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி (HIV) தொற்றமா?

அதற்கு விடை கூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக முன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும்.

•    HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.
•    அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
•    வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும்.
மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.

H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.

ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வாழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையால் நோயைத் தேட முன்னிற்கிறான்.

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன.


1.    நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
2.    நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவுவதற்குக் காரணமாகிறது.
3.    தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும் பின் பாலூட்டுவதாலும்.
4.    இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா

இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.

ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.

இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.

எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?

எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.

இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நோயுள்ளவர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல்லது தனது வாய் நாற்றத்தை மறைப்பதற்காக,
உறவுக்கு முன் குளித்து தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறார்.
அத்துடன் வாயையும் பிரஸ் பண்ணிக் கொள்கிறார்.

ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது.
அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது.
உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.

அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது. அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும்.

உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.

HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய  இங்கே கிளிக்குங்கள்

மற்றொரு சாத்தியத்தையும் கவனியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத்தில் மற்றவரது உதட்டைக் கடித்துவிடுகிறார்.
நுண்ணிய சிறுகாயம்தான்,
ஆனால் அதன் ஊடாக கிருமி பரவிவிடலாம் அல்லவா?

இவ்வாறு உறவின் போதல்ல, ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.

மற்றொருவர் வந்தார்.
அவர் அடிக்கடி மேயப் போவார்.
ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவதேயில்லை.
ஆனால் அவருக்கு மற்றொரு பழக்கம் இருந்தது.

அதுதான் வாய்ப் புணர்ச்சி. மிக ஆபத்தானது.
நல்ல காலம்! இரத்தப் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றியிருக்கவில்லை.

விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என நம்பலாம்.

பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு தெரியாது பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடுவதுண்டு.

இருந்தபோதும், பலரும் பயப்படுவதுபோல
தொட்டுப் பேசுவதாலோ,
அருகில் இருப்பதாலோ,
உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொளவதாலோ HIV தொற்றுவதில்லை.

காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.

இவ்வாறேல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாமலிருக்க இயற்கை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத இச்சையால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல்கிறோம்.

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள்விக்கு வருவோம்.

"உலகில் ஒரே ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல" என்று நீங்கள் கருதினால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சந்தோசமாக, ஆசைப்பட்டவருக்கு,
விரும்பியவருக்கு எல்லாம்
வாயால் ஆழ்
முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.

மேற் கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட செல்லலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம் - 01-15 ஏப்ரல் 2010.
0.0.0.0.0.0

Post Comment

Saturday, April 3, 2010

கொலையும் செய்யுமாம் ரீவி- TV Viewing Kils

நகர்புற மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் ரீவி பார்ப்பது முக்கிய பொழுது போக்காகிவிட்டது.

"நாள் முழுவதும் ரீவி பார்க்கிறதுதான் இவளுக்கு வேலை"
என்று குமுறுகிற ஆண்களும் கூட
வேலையால் வந்த பின்
விளையாட்டு, நடைப்பயிற்சி அல்லது நீச்சல்
என எந்த உடல் பயிற்சியிலும் ஈடுபடாது ரீவி அல்லது கொப்பியூட்டர் முன் அமர்ந்துவிடுகிறார்கள்.


உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதால் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். உடற் பயிற்சியின் நன்மைகள் பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்டும் இருக்கிறது.

ஆனால் உடலுழைப்பு அற்று, உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள் குறைவு.

அண்மையில் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். Australian Diabetes, Obesity and lifestyle Study (AusDiab)  எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வானது 8800 பேர்களை உள்ளடக்கியதாகும்.

டெலிவிசன் பார்ப்பது அல்லது அது போன்ற தொடர்ச்சியாக ஒரே விதமான உடலுழைப்பற்ற பொழுது போக்கில் இருப்பதற்கும், இருதய நோய்கள் மற்றும் ஏனைய காரணங்களினாலான மரணத்திற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என அறிவதற்கான 6.6 வருடகாலமாகச் செய்யப்பட்ட  ஆய்வு அது.

வயது, பால், இடுப்புச் சுற்றளவு, உடற்பயிற்சி ஆகியவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்தார்கள்.

அதன் பின்னரும் எக்காரணத்திதாலும் ஏற்படக் கூடிய மரணம், இருதய நோய்களால் ஏற்படக் கூடிய மரணம், புற்றுநோய்களால் ஏற்படக் கூடிய மரணம் ஆகியன ரீவீ பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப அதிகரிப்பதை ஆய்வு உறுதி செய்தது. ஆயினும் புற்றுநோய் அதிகரிப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே அதிகரித்திருந்தது.


தினமும் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக ரீவி பார்ப்பவர்களுடன் தினமும்,

2-4 மணிநேரம் ரீவி பார்ப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது எந்த நோய்களினாலும் மரணிப்பதற்கான சாத்தியம் 1.13 சதவிகிதத்தாலும்,

4 மணிநேரத்தற்கு அதிகமாக பார்ப்பவர்களுக்கு 1.46 சதவிகிதத்தாலும் அதிகரித்தது.

மேற்கூறிய நேர அளவுகளில் ரீவி பார்ப்பதால் இருதய நோய்களால் மரணிப்பதற்கான சாத்தியம் முறையே 1.19 மற்றும் 1.8 சதவிகிதத்தினால் அதிகரித்தது.

ஆனால் நேரம் அதிகரிப்பதற்கும் புற்றுநோயால் இறப்பதற்கான சாத்தியம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

எனவே நாம் செய்யக் கூடியது என்ன? ரீவி பார்க்கும் நேரத்தை 2 மணிநேரத்திற்கு மேற்படாது குறைக்க வேண்டும்.


ரீவி பார்ப்பது மட்டுமின்றி கொம்பியூட்டர், செஸ், காட்ஸ் போன்ற எந்த உடலசையாத பொழுதுபோக்குகளுக்கும் இது பொருந்தும்.

மிகுதி நேரத்தை விளையாட்டு, நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது வீட்டுத் தோட்டம் போன்ற உடலுழைப்புடன் கூடிய பொழுது போக்கில் செலவளிக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment