Wednesday, April 14, 2010

பொங்கல் மற்றும் விதைகள் (Nuts) - சில பயனுள்ள தகவல்கள்

பொங்கல் எமது பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. தைப்பொங்கல் போலவே பலருக்கும் சித்திரை வருடப்பிறப்பும் மற்றொரு பொங்கலாகும்.
  
பொங்கல் 

அதற்கு மேலே புதூர் நாகதம்பிரான் பொங்கல், நாச்சிமார் பொங்கல், பண்டித்தலைச்சி அம்மன் பொங்கல், வற்றாப்பளை அம்மன் பொங்கல், மந்திகை கண்ணகி அம்மன் பொங்கல் என ஊருக்கு ஊர் வருடா வருடம் வேறு பல பொங்கல்களுக்கும் குறைவில்லை.


சிங்களவர்களுக்கு திருநாள் என்றால் கிரிபத் என்பது போல எங்களுக்குப் பொங்கல் எனலாம்.

சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல், வெண்பொங்கல் எனப் பலவகைப்படும்.


பொங்கலில் என்ன சேர்த்து இருக்கிறார்கள்?

பச்சை அரிசியுடன் பசுப்பால் அல்லது தேங்காய்ப் பால், இவற்றுடன் வறுத்த பயறு, ஏலக்காய், நெய் ஆகியனவும் சேர்த்துக் கொள்வார்கள்.



கஜீ - முந்திரிப் பரும்பு (Cashew Nut)

அவற்றிற்கு மேல் முக்கியமான பொருள் ஒன்று சேர்ப்பார்கள். அதுதான் கஜூ எனப்படும் முந்திரிப் பருப்பு. சிலர் முந்திரிப் பருப்புக்குப் பதிலாக மணிலாப் பருப்பு சேர்ப்பார்கள்.

கஜூ என்பது ஒரு விதை.

விதைகள் எமது உணவின் ஒரு ஆரோக்கியமான அம்சமாகும். அவை எமது இருதயத்திற்கு நன்மை பயப்பவையாகும். எந்த விதை என்றிலை எல்லா விதைகளுமே போசாக்குப் பொருட்களை அடர்த்தியாகக் கொண்டுள்ளன.

நீங்கள் ஒரு இருதய நோயாளியாயின் வேறு நொறுக்குத் தீனிகள் தின்பதை விட விதைகளை உண்பது நன்மை பயக்கும்.


விதைகளின் நல்ல பயன்கள்

விதைகள் எவ்வாறு இருதய நோயாளர்களுக்கு நன்மை செய்கின்றன?

கெட்ட கொலஸ்டரோலைக் குறைக்கும்

எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலில் LDL என்றொரு கூறு உண்டு. இதனை கெட்ட கொலஸ்டரோல் என்பர். ஏனெனில் இது குருதிக் குழாய்களில் படிந்து குருதிச் சுற்றோட்டத்தை குறையச் செய்யும். அதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

தமது உணவின் ஒரு கூறாக விதைகளை தினமும் உண்பவர்களுக்கு LDL கொலஸ்டரோல் அளவு குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களை விதைகள் குறைக்கின்றன எனலாம்.

குருதி உறைதலைக் குறைக்கும்

அதேபோல குருதி உறைதலைக் குறைக்கும் ஆற்றலும் விதைகளுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இருதயத்தின் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் பக்கவாதம்
(Stroke) ஏற்படுவதை நாம் அறிவோம். 
 
எனவே உயிராபத்தை ஏற்படுத்தும் இந்நோய்களை விதைகள் குறைப்பதாகக் கொள்ளலாம்

குருதிக் குழாய்களின் உட்சுவரில் உள்ள கல அமைப்பை (endothelium) என்போம். இந்த என்டோதிலியம் ஆரோக்கியமாக இருந்தாலும் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். விதைகளில் உள்ள போசாக்குப் பொருட்கள் (endothelium function) அதை நல்நிலையில் பேணுவதாகவும் தெரிகிறது.

விதைகளில் உள்ள எந்தப் பொருட்கள் காரணமாகின்றன?

விதைகளில் உள்ள பல் விற்றமின்களும், நல்ல கொழுப்புகளும் நார்ப் பொருள் போன்ற பலவும் ஆரோக்கியத்திற்கு நல்லன.

நிரம்பாத கொழுப்பு அமிலங்கள்

விதைகளில் நல்ல கொழுப்பு அமிலங்கள் (Monounsaturated and polyunsaturated fats) அதிகளவு இருக்கின்றன. இவையே குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோலைக் குறைப்பதாக நம்பப்படுகிறது.

ஒமேகா கொழுப்பு அமிலம்


ஒமேகா கொழுப்பு அமிலம் (Omega-3 fatty acids) என்பது எமது இருதயத்திற்கு நல்லது. 
மாரடைப்பு வருவதைக் குறைப்பதுடன், 
இருதயத்தின் துடிப்பு லயத்தைப் (Heart rhythms) பேணுவதற்கும் மிகவும் உதவுகிறது. 
 
இது பொதுவாக ஆழ்கடல் மீன்களில் இருக்கும். தாவர வகைகளில் குறைவு. ஆயினும் விதைகளில் இருப்பதால், மீன் சாப்பிடாதவர்களுக்கு உதவும்.

நார்ப் பொருள்

விதைகளில் நார்ப் பொருள் குறிப்படத்தக்க அளவில் உண்டு. நார்ப் பொருட்களானது எமது வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் தேவையற்ற மேலதிக உணவு உண்பதைத் தவிர்க்க உதவுகிறது. அத்துடன் கொலஸ்டரோல் நீரிழிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

விற்றமின் ஈ
(Vitamin E)

பலரும் இப்பொழுது விற்றமின் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இது இரத்தக் குழாய்கள் தடிப்படைந்து மாரடைப்பு வருவதைத் தடுக்கும் என நம்பப்பட்டதே காரணம். ஆயினும் இயற்கையாக உணவுகளிலிருந்து கிடைக்கும் விற்றமின் ஈ மட்டுமே இவ்வாறு உதவுகிறது. செயற்கையாக மாத்திரைகளால் கிடைப்பவற்றிலிருந்து அல்ல. விதைகளில் விற்றமின் ஈ கிடைக்கிறது.

ஸ்டெரோல்
விதைகளில் ஸ்டெரோல் (Plant sterols) என்ற பொருள் கிடைக்கிறது. இது ஏனைய பல தாவர உணவுகளிலும் கிடைக்கிறது. இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவை இதுவும் குறைக்க உதவுகிறது.

எவ்வாறு உண்பது?

விதைகளை வறுத்துச் சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது கூடாது.

விதைகளில் அதிக அளவு கொழுப்பு இருக்கிறது. உண்மையில் 80% அளவுக்கு இருக்கிறது. இது பெரும்பாலும் நல்ல கொழுப்பு என்ற போதும், கொழுப்பு காரணமான அதிக கலோரி இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே விதைகள் நல்லவையான போதும் அளவோடு உண்பது அவசியம். இறைச்சி, பால், பட்டர், முட்டை போன்றவற்றிலிருந்து பெறும் கொழுப்பிற்கு மாற்றீடாக அதை விதைகளிலிருந்து பெற்றால் நல்லது என்பேன்.

ஒரு சிறங்கை அளவு(சுமார் 45கிராம்) பாதாம் பருப்பு, கச்சான், பிட்சா பருப்பு, பைன்நட், வோல்நட், பீகன்ஸ், போன்ற விதைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக் குறையும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (FDA) கூறுகிறது. 
 
ஆயினும் இது ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் ஓரு அங்கமாக இருக்க வேண்டும். ஏனைய பால் மற்றும் இறைச்சி வகை கொழுப்புகளைக் கட்டுப்படுத்தாது வெறுமனை விதைகளைச் சாப்பிடுவதால் பயனேதும் இல்லை.

எந்த விதை நல்ல விதை


விதைகளில் எந்த விதை நல்லது என்று கேட்டால் எல்லாமே நல்லதுதான்.

கச்சான் என்பது உண்மையில் விதையில்லை. அது பயறு, பயிற்றை போல ஒரு அவரை இன உணவுதான். ஆயினும் ஒப்பீட்டு ரீதியில் பாரக்கும் போது அதுவும் ஆரோக்கியமானதே.

ஆயினும் தேங்காய் Coconut என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட போதும் அது பழமே அன்றி விதையல்ல.

அதில் இருதயத்திற்கு ஆரோக்கியமான நன்மைகள் எதுவும் இல்லை. எனவே தேங்காய், தேங்காயப் பால், தேங்காயெண்ணெய் போன்றவற்றை குறைவாகவே உபயோகிப்பது நல்லது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.

ஆனால் விஞ்ஞான ரீதியாக இதனை மறுதலிப்பவர்களும் உளர்.

சரி மீண்டும் பொங்கலுக்கு வருவோம். பொங்கல் ஆரோக்கியமான உணவா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 
 
கஜூ, பயறு போன்றவை இருந்தபோதும் சர்க்கரை, கற்கண்டு, பசுப்பால், தேங்காய்ப்பால், நெய் போன்றவை அதிகமாகச் சேர்க்கப்படுவதால் ஆரோக்கிய உணவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் கொழுப்பும் இனிப்பும் அதிகம் உண்டு.

ஆயினும் முற்றாகத் தவிர்க்க வேண்டியதும் இல்லை.

பண்டிகை உணவாக விசேட தினங்களில் மட்டும் அளவோடு சாப்பிட்டால் ஆபத்து அதிகமில்லை.

வெண்பொங்கலை பல காய்கறிகளும் சேர்த்த சாம்பாருடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.  
 
வெண்பொங்கலுக்கு தேங்காய்ப் பால் சேர்க்கப்பட்டாலும் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள்கள் அவற்றை ஆறுதலாகச் சமிபாடடையச் செய்வதால் ஓரளவு சமடையச் செய்கின்றன. அத்துடன் விற்றமின்களும் அதிகம் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

இருக்கிறம் சஞ்சிகையிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

0.0.0.0.0.0.0

Post Comment

11 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பயனான குறிப்புகள்!!!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
புதுவருடம் கொண்டாடின் என் வாழ்த்துக்கள்.
மிக மிகப் பயனுள்ளதும்; எனக்கு மிக வேண்டியதுமான பதிவு!
எண்ணெயில் வறுகாமல், உப்புச் சேர்க்காமல் என்பதைப் பலர் பின்பற்றுவதில்லை.
பிரான்சியர் கொட்டைகள் விதைகளை விரும்பி உண்பவர்கள். இவர்களின் சமையலிலும் சேர்ப்பர்.

JKR said...

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

JKR said...

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

Chitra said...

ஆரோக்கிய வாழ்வுக்கு பயனுள்ள தகவல்கள். இனிய புத்தாண்டு/பொங்கல் வாழ்த்துக்கள்!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Dr.P.Kandaswamy said...

உங்கள் விதைகள் பற்றிய செய்திகள் அருமை. கடந்த சில நாட்களாக தினமும் 6 பாதாம் கொட்டை மற்றும் 6 முந்திரிக்கொட்டை சாப்பிட்டு வருகிறேன். ஒரு மாற்றம் தெரிகிறது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி யோகன் பாரிஸ். முக்கியமாக எண்ணெயில் வறுக்காமல் உப்புச் சேர்க்காமல் என்ற கருத்தை முன் வைத்ததற்கு

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துரைகளுக்கு நன்றி JKR, and Chitra

Jaleela said...

நட்ஸ் பற்றி, பொங்கல் பற்றி பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வாழ்த்துக்கள்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல ஆரோக்கியமான செய்தி சொன்னீர்கள் Dr.P.Kandaswamy ஐயா, தொடருங்கள் உங்கள் முயற்சியை.

கருத்துரைக்கு நன்றி Jaleela

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்