Sunday, December 27, 2009

வைன் குடிப்பது நல்லதுதானா?


An apple a day keeps the doctor away என மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.

ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

உடல் நலத்திற்காக அல்ல!


அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.

வைனின் நல்ல பயன்கள்

உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது
புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.
இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,
வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,
நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது
என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?

அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?

அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப் பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.

வைனில் உள்ள மதுவல்ல காரணம்


ரெஸவெடரோல் (Resveratrol) என்ற இரசாயனப் பொருளே முக்கிய காரணமாம்.

அது குருதியில் நல்ல கொலஸ்டரோல் HDL அளவை அதிகரித்து இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது.
அத்தோடு குருதி உறைதலைக் குறைத்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன.
அழற்சிக்கு எதிரான தன்மையும் ரெஸவெடரோலுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Resveratrol பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

அல்ஸிமர் நோய், பார்க்கின்சன் நோய் போன்றவை மூளை நரம்புகளை படிப்படியாகச் சேதமடையச் செய்து மூளையை மந்தமாக்கும்.
வைன் அருந்துவது இந் நோய்கள் தீவிரமாகும் வேகத்தை குறைக்கின்றன எனத் தெரிகிறது.


அவ்வாறெனில் தினமும் வைன் குடிப்பது நல்லதா?

வைன் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு.

வைனின் மறுபக்கம்

உதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.


உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.

கபாலக் குத்து எனப்படும்
(Migraine) நோயாளர்கள் பலருக்கும் வைன் தூண்டியாக இருப்பது தெரிகிறது. முக்கியமாக செவ் வைன் (Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.

வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

வைன் என்பது உண்மையில் ஒரு மது.
மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.
அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.
ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.

இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.

எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.

எவ்வாறு அருந்துவது

இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.

அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள் முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.

ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.

அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.

இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.



காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும்.


ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.

வைன் குடிப்பது அவசியமா?

மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?

நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.

ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.

ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும்.

வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.

வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.

வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.

என்ன சொல்லப் போகிறீர்கள்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி

இருக்கிறம் 01.11.2009

Post Comment

Thursday, December 17, 2009

மூக்கால் இரத்தம் வடிதல் (Epistaxis)


மார்கழி மாதம். கடும் குளிர். அதிகாலை வந்தவர் ஒரு நடுத்தர வயது மனிதர். நோயாளி, கூட வந்தவர்கள் யாவரும் கடும் பதற்றத்தில் இருந்தனர். அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்கவும் செய்தது.

'அப்பாவின் பிரஸரைப் பாருங்கோ' மகள்' அந்தரப்பட்டாள்.

'ஏன் என்ன பிரச்சனை?' நான்.

'அப்பாவிற்கு காலையிலை மூக்காலை இரத்தம் கொட்டினது. அதுதான் பிரஸரைப் பாருங்கள்.'

அவர்கள் திருப்திக்காக உடனடியாகவே பிரஸரைப் பார்த்தேன்.


எதிர்பார்த்தது போல அதிகம் இல்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் பார்த்தே இருப்பேன். ஏனைய முக்கிய விடயங்களைப் பார்த்த பின்.

மூக்கால் இரத்தம் வடிவது என்பது எல்லோரையும் மிகவும் பயமுறுத்துகிற விடயம்தான். ஆனால் மிகப் பெரும்பாலும் அது பயப்படக் கூடியதோ, மரணத்திற்கு இட்டுச் செல்வது போல ஆபத்தானதோ இல்லை.

மூக்கால் ஏன் இரத்தம் வடிகிறது?

எமது மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

மூக்கைக் குடையும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.


இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.

பொதுவாக குளிர் காலத்தில் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் வரண்டு சிலநேரங்களில் வெடிப்பதைப் போன்றதே இதுவும்.

குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவது அதிகம். எனவே தடிமன் வருவதும் அதிகம் இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

ஏனைய காரணங்கள்

  1. தடிமன், சளி போன்ற கிருமித்தொற்று நோய்கள்
  2. ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)
  3. மூக்கு அடிபடுதல், காயம், மூக்கு குடைதல்
  4. அதீத மதுப் பாவனை
  5. உயர் இரத்த அழுத்தம்
  6. குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகளான அஸ்பிரின, குளபிடோகிரில் போன்றவை
  7. கட்டிகள், சவ்வுகள் போன்றவை
மேலே காட்டிய Cutanneous horn என்பது வரட்சியான ஒரு வகை தோல் வளர்ச்சி. ஆயினும் இதுவும் அதிகம் காணப்படும் நோயல்ல.

நீங்கள் செய்யக் கூடிய முதலுதவி

காரணம் எதுவானாலும் அது மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டியதாகும்.

ஆனால் மருத்துவரைக் காணு முன்னரே முதலுதவி மூலம் நீங்களே மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மூக்கு எலும்பிற்கு கீழே இருக்கும் மூக்கின் மென்மையான பாகத்தை உங்கள் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்திப் பிடியுங்கள். அவ்வாறு செய்யும்போது மூக்கின் அந்தப் பகுதியை பிற்பறமாக முகத்து எலும்புகளோடு சேர்த்து அழுங்கள்.


இவ்வேளையில் சற்று முன்புறமாகச் சாய்ந்திருப்பது நல்லது. மாறாக பிற்புறமாகச் சாயந்தால் வழியும் இரத்தம் தொண்டை. சைனஸ் போன்றவற்றுக்குள் உள்ளிட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடக் கூடும்.

அவ்வாறு தொடரந்து 5 நிமிடங்களுக்கு அழுத்திப் பிடியுங்கள். கையை எடுத்தபின் தொடர்ந்து இரத்தம் வந்தால் மேலும் 5 நிமிடங்களுக்கு அவ்வாறு செய்யுங்கள்.

அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.

மூக்கிற்கு மேலும் கன்னங்களிலும் ஐஸ் வைப்பதும் இரத்தம் பெருகுவதைக் குறைக்கும்.

மீண்டும் வடிவதைத் தடுப்பது எப்படி?


இப்பொழுது இரத்தம் வருவது நின்றாலும் கவலையீனமாக இருந்தால் திடீரென மீண்டும் ஆரம்பமாகலாம். அதைத் தடுக்க வழி என்ன?

மூக்குச் சீறுவதைத் தவிருங்கள். அதே போல மூக்குக்குள் விரலை வைத்துக் குடைய வேண்டாம். வேறு எந்தப் பொருளையும் கூட மூக்கிற்குள் வைக்க வேண்டாம்.

தும்முவது கூடாது. தும்ம வேண்டிய அவசியம் நேர்ந்தால் வாயைத் திறந்து வாயினால் காற்று வெளியேறுமாறு தும்முங்கள்.

மலங்கழிப்பதற்கு முக்குவது கூடாது. அதேபோல பாரமான பொருட்களை தம்மடக்கித் தூக்குவதும் மீண்டும் இரத்தம் கசிய வைக்கலாம்.

வழமையான உணவை உட்கொள்ளுங்கள். அதிக சூடுள்ள பானங்களை 24 மணி நேரத்திற்காவது தவிருங்கள்.

மூக்கால் வடிவதற்கு அதன் மென்சவ்வுகள் வரட்சியாக இருப்பதுதான் காரணம் என்றால் அதனை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு கிறீம் வகைகள் தேவைப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.

புகைத்தல்

புகைப்பவராயின் அதனைத் தவிருங்கள்.

மூக்கினால் இரத்தம் வடிவதை மேற் கூறிய முறைகளில் உங்களால் நிறுத்த முடியாவிட்டால் மருத்துவரை நாடுவது அவசியம்.

மிக அதிகளவு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், அல்லது களைப்பு தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ உதவி அவசியமாகும்.

இரத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு Nasal packing செய்வார்கள்.

ஆயினும் இதுவும் நீங்களாகச் செய்யக் கூடியது அல்ல. பயிற்சி பெற்றவர்களால் செய்ய வேண்டியது.


மிக அரிதாகவே மூக்கால் இரத்தம் வடிபவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி நேரிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Sunday, December 6, 2009

பொடுகு செய்ய வேண்டியது என்ன?

பொடுகு என்பது சாதாரணகக் காணப்படும் ஆபத்தற்ற பிரச்சனையாகும். இருந்த போதும் பலரையும் மிகுந்த துன்பத்திற்கும் மனக் கஷ்டத்திற்கும் ஆளாக்கும் பிரச்சனை இது.

தலையில் அரிப்பைக் கொடுப்பது மாத்திரமின்றி வெள்ளித் துகள்கள் போல சருமத் துண்டுகள் கழன்று வருவதால் அசிங்கமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.

இது ஒரு தொற்றுநோய் அல்ல.
பாரதூரமான வருத்தமும் அல்ல.

ஆனால் மற்றவர்கள் முன் வெட்கப்பட்டு தலைகுனிய வைக்கிறது.

தனிமனித ஆளுமைக்குச் சவால் விடுகிறது.


சாதாரண நோய் என்ற போதும் மருத்துவத்திற்கு பல வேளைகளில் சவால் விடுகிறது.

சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்

முற்று முழுதாகக் குணமாக்குவது சிரமம் ஆனபோதும்,
பெரும்பாலும் சுலபமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடியதாகும்.

தினமும் தலைக்கு சாதாரண ஷம்பூ போட்டு முழுகுவதால் மட்டுமே இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம்.

கடுமையான பொடுகுள்ளவர்களும் அவர்களது நிலைக்கு ஏற்ற விசேட மருத்துவ ஷம்பூகளை உபயோகிப்பதன் மூலம் குணம் காணலாம்.

பெரும்பாலான பதின்ம வயதினருக்கும் வளர்ந்தவர்களுக்கும் பொடுகு இருப்பதைக் கண்டு பிடிக்க மருத்துவ அறிவு கூடத்தேவையில்லை. தலையை உற்றுப் பார்த்தால் போதும்.


தேங்காய்த் துருவல் போன்ற உருவமுள்ள, எண்ணைப் பிடிப்பான உதிர்ந்த சருமத் துகள்கள் முடியிலும், தோள் புறத்திலும் விழுந்து கிடக்கும். அத்துடன் தலையில் அரிப்பும் இருக்கும்.


ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பலரின் தலையில் வெள்ளை நிறத்தில் சொரசொரப்பான படையாக தொப்பி அணிந்ததுபோல தோன்றுவதும் ஒரு வகை பொடுகுதான்.


பார்ப்பதற்கு அசிங்கமாகவும் பெற்றோர்களைப் பயமுறுத்துவதாகவும் தோன்றும் இது ஆபத்தற்றது. குழந்தை வளர்ந்து ஒரு வயதாகும் நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

பொடுகுள்ள மற்றவர்களும் தலையை ஷாம்பூ உபயோகித்து சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது. தலைச் சருமம் சிவந்து வீங்கி துன்பம் அளித்தால் மட்டும் மருத்துவரைக் காண வேண்டிய தேவை ஏற்படும்.

எதனால் ஏற்படுகிறது

வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு பொடுகு உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் குளிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் மேலும் அதிகமாகும். வரட்சியான சருமம் உள்ளவர்களது பொடுகானது பொதுவாக எண்ணெய்ப் பற்றற்றதாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும்.

எண்ணைத் தன்மையான சருமம் உள்ளவர்களுக்கு மற்றொரு விதமான பொடுகு ஏற்படுவதுண்டு. இதுவே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதாகும். சற்றுச் சிவந்த வழுவழுப்பான எண்ணைச் சருமத்தில் உண்டாவது மங்கலான நிறம் கொண்ட அல்லது மஞ்சற் தன்மையான பொடுகாகும்.
இதனை மருத்துவத்தில் seborrheic dermatitis என்பார்கள். அதாவது இது எக்ஸிமா போன்ற தோல் அழற்சி நோயாகும். இது தலையில் மட்டுமின்றி அக்குள், தொடையின் மடிப்புப் பகுதி, மார்பின் மத்திய பகுதி, கண் புருவம், மூக்கின் மடிப்புப் பகுதி, காதின் பின்புறம் ஆகியவற்றிலும் தோன்றுவதுண்டு.


சுத்தம்செய்யாத தலைமுடி அடிக்கடி தலைக்கு முழுகிச் சுத்தம் செய்யாதவர்களின் தலையில் அவர்களது தலையிலிருந்து சுரக்கும் எண்ணெய்ப் பொருள்,
உதிரும் சருமத் துகள்கள் ஆகியன சேர்ந்திருந்து
பொடுகு ஏற்படுவதை ஊக்குவிக்கும்.


சரும நோய்கள். இவற்றைத் தவிர எக்ஸீமா(Eczema) , சொறாஸிஸ் (Psoriasis) போன்ற சரும நோய்களும் பொடுகு நோய்க்குக் காரணமாகலாம்.

உங்கள் தலைமுடியைப் பேணுவதற்காகவும் அழகுபடுத்துவதற்காகவும் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள், கிறீம், சாயம் ஊட்டிகள் போன்றவையும் கூட தோலில் அரிப்பு, அழற்சியை ஏற்படுத்தி பொடுக்கிற்கு வழிவகுக்கலாம்.

அடிக்கடி ஷம்பு இடுவதும், அதிக அளவில் முடியை அழகுபடுத்தும் பொருட்களை உபயோகிப்பதும் தலையில் சருமத்தை உறுத்திப் பொடுகிற்குக் காரணமாகலாம்.
மலஸ்சிசா கிருமி ஈஸ்டைப் போன்ற ஒரு கிருமியான மலஸ்சிசா (malassezia) எமது தலையின் சருமத்தில் இயற்கையாக வாழ்கிறது. இது எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை. ஆயினும் சிலவேளைகளில் இது அத்துமீறி வளர்ந்து தலையில் சுரக்கும் எண்ணெயை இரையாக்குவதால் சருமம் அழற்சியடைந்து வேகமாக உதிர்கிறது. இது பொடுகாக வெளிப்படும்.

மலஸ்சிசா கிருமி ஏன் சிலரில் சிலநேரங்களில் வேகமாக வளர்கிறது என்பது தெளிவாகத் தெரியாதபோதும், மனஅழுத்தம், வேறு உடல் நோய்கள், ஹோர்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம், பார்க்கின்ஸன் நோய், நலிவடைந்த உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும் காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

யாருக்கு எதனால் ஏற்படுகிறது

பொதுவாக இளைமைக் காலத்தில் தோன்றும் இது நடுத்தர வயது வரை நீளக் கூடும்.
ஆயினும் முதியவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.
சிலருக்கு முதுமை வரை தொடர்ந்து இருக்கக் கூடுமாயினும்
பெரும்பாலும் வயதாகும்போது அதன் வேகம் குறைந்துவிடும்.

பெண்களைவிட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது தலையில் கூடியளவு எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதாகும். ஆண் ஹோர்மோன்கள் அடிப்படைக் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எண்ணெய்த் தன்மையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் தோன்றலாம்.

போசாக்கு குறைந்த உணவும் காரணமாகலாம் முக்கியமாக சின்க் (Zinc), விற்றமின் பீ போன்ற குறைபாடுகளும் காரணமாகலாம்.

பார்க்கின்ஸன் போன்ற நரம்பு சம்பந்தமான நோயுள்ளவர்கள், மற்றும் மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாரிய நோய்களின் பாதிப்பால் உளநெருக்கீட்டுக்கு ஆளாபவர்களுக்கும் அதிகம் ஏற்படுகிறது.

மருத்துவம்

பொடுகு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை அல்ல. சற்று அதிக காலம் எடுக்கக் கூடியது என்பதால் சற்று பொறுமையாகவும், தொடர்ந்தும் அக்கறை எடுப்பது அவசியமாகும். பொதுவாக மென்மையான ஷம்பூக்களை உபயோகித்து தலையைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே பலருக்கு அதன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும்.


முடியாதபோது மருத்துவ ஷம்பூக்களை நாடவேண்டி நேரிடும். Zinc கலந்தவை, Coal Tar கலந்தவை, சலிசலிக் அமிலம் கலந்தவை, செலீனியம் கலந்தவை, பங்கசுக்கு எதிரான மருந்துகள் (உதா- Ketoconazole)கலந்தவை எனப் பல வகையுண்டு. மருத்துவ ஆலோசனையுடன் தங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஷம்பூ உபயோகிக்கும் போது அவதானிக்க வேண்டியவை

ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று தடவைகளாவது உங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட ஷம்பூவை உபயோகிக்க வேண்டும்.
பிறகு வாரத்திற்கு இரண்டு தடவைகளாகக் குறைக்கலாம்.
மிகக் கடுமையான பொடுகு உள்ளவர்கள் தினமும் உபயோகிக்கலாம்.
ஷாம்பு வைத்தவுடன் தலையைக் கழுவக் கூடாது.
3 முதல் 5 நிமிடங்கள் வரை காலம் தாழ்த்திக் கழுவினால்தான் மருந்து செயற்பட போதிய அவகாசம் கிடைக்கும்.

நீண்டகாலம் உபயோகித்து அதன் வீரியம் குறைந்துவிட்டதாகத் தோன்றினால் மருத்துவரின் ஆலோசனையுடன் வேறு வழியில் செயற்படும் மற்றொரு ஷம்பூவை மாற்றலாம்.

வேறு என்ன செய்யலாம்


சமபல வலுவள்ள போஷாக்கு உணவுகளை உண்ணுங்கள். அதிலும் முக்கியமாக சின்க் Zinc விட்டமின் பீ, போன்றவை பொடுகைத் தடுக்கும் என நம்பப்படுகிறது.

உங்கள் தலைச் சருமமானது எண்ணெய்த் தன்மை அதிகமுள்ளதாயின் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஷம்பு இட்டு சுத்தப்படுத்துவது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- வீரகேசரி

Post Comment