Saturday, October 24, 2009

மணிக்கட்டில் கட்டி

அவளுக்குப் பயம் பீடித்திருந்தது.

'இது கான்சராக இருக்குமோ?'

அண்மையில்தான் அவளது நெருங்கிய உறவினர் ஒருவர் மார்புப் புற்றுநோய் எனக் கண்டிறியப்பட்டு சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்தார்.

ஆனால் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல என்பதும் கட்டிகள் இல்லாமலும் புற்றுநோய்கள் வராலாம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவளுக்கு வலது மணிக்கட்டை அண்டிய இடத்தில் ஒரு கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வலிக்காததாலும், வேறு எந்தத் தொல்லை இல்லாததாலும் அலட்சியம் பண்ணிவிட்டாள். இப்பொழுது உறவினருக்கு புற்றுநோய் என்றதும் கிலி பிடித்து ஓடி வந்திருந்தாள்.

எத்தகைய கட்டி

இத்தகைய கட்டிகளை Ganglion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவதுண்டு. சிலவேளைகளில் முன்புறத்திலும் வரலாம்.


சிலருக்கு கால்களின் மேற்புறத்திலும் உண்டாவதுண்டு. மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம்.

இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. தோலுக்கு கீழே இருக்கும். தோலுடன் ஒட்டிக் கொண்டிராது வழுகிக் கொண்டிருக்கும். நீர்க்கட்டி (Cyst) போன்றது. அதற்குள்ளே நீரைவிட சற்றுத் தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

இத்தகைய திரவம்தான் எமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழுவழுப்புடன் வைத்திருந்து சுலபமாக இயங்க வைக்கின்றன. எப்பொழுதாவது அடிபடும் போது மூட்டு அல்லது தசைநாரைச் சுற்றியிருக்கும் இத் திரவம் வெளியேறி ஏதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைப்பட்டு கட்டிபோலச் சேருவதாலேயே இது ஏற்படுகிறது.


கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இது வேறு இடங்களுக்குப் புற்றுநோய் போலப் பரவாது.

1-2 செ.மி வரை வளரக் கூடும். புற்றுநோய் போன்ற ஆபத்து எதுவும் ஏற்படாது எனச் சொன்ன போதும் சிலர் அதை அகற்ற வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. அது அசிங்கமாக தோன்றுவதே காரணம். பொதுவாக வலிப்பதில்லை. ஆயினும் சில தருணங்களில் நரப்புகளுக்கு அருகில் இருந்தால், அது அழுத்தப்பட்டு சிறிது வலி ஏற்படலாம். சிலருக்கு விறைப்பு ஏற்படுவதும் உண்டு.

சிகிச்சை

பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிலகாலம் செல்ல எப்படி மறைந்தது என்று தெரியாமலே பலருக்கும் தானாக மறைந்து விடுவதுண்டு.

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத் திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிகத் தடிப்பான திரவமாதலால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை.

பொதுவாக அவ்வாறு அகற்றிவிட்டு அதனுள் ஸ்டீரொயிட் ஊசி மருந்தை ஏற்றுவார்கள். உடனடியாக மறைந்தாலும் இச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் மீண்டும் வளர்வதுண்டு.

பைபிள் சிகிச்சை

ஆனால் அதற்கு மேலாக ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை உண்டு. பேசிக் கொண்டிருக்கும் போதே நோயாளி எதிர்பாராத விதத்தில் மருத்துவர்கள் அருகில் உள்ள தடித்த கனமான புத்தகத்தால் கட்டி மீது ஓங்கி அடிப்பார்களாம். உடனடியாகவே உள்ளே உள்ள கூடு வெடித்து நீர் பரவியதும் கட்டி மறைந்துவிடும்.

அதிர்ச்சி வைத்தியமான போதும் இம்முறையில் ஆபத்து எதுவும் கிடையாது. முன்பு அதற்காக குடும்ப பைபிளைப் பயன்படுத்துவார்களாம். புனிதம் என்பதால் அல்ல. பாரம் கூடியது என்பதால். ஆயினும் வெடித்த மறைந்த கூட்டின் சுவர் சிலவேளைகளில் மீண்டும் வளர்ந்தால் கட்டி மறுபடி தோன்றலாம்.

மேற் கூறியவற்றால் குணமடையாவிட்டால், அல்லது நோயாளிக்கு தொல்லை கொடுத்தால் சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. சத்திரசிகிச்சையானது மேற் கூறியவற்றை விட நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும் மீண்டும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.



நோயாளிக்கு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் கிடையாது எனில் அவதானித்து வந்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Saturday, October 10, 2009

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்

நீங்கள் ஒரு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதனை எதிரிலிருப்பவர் சந்தேகப்படாதவாறு உங்களால் சொல்ல முடியுமா?

முடியும் என்று எண்ணுகிறோம். நாம் பொய் சொல்லும்போது அதனைக் கேட்பவர் உணரமாட்டார் என்று எண்ணியே சொல்கிறோம்.

ஆனால் எமது உள்ளுணர்வுகளை முகத்திரை போட்டு முழுமையாக மறைப்பது சாத்தியம்தானா?

அல்லது உங்கள் உடல் தனது மொழிகளால் நீங்கள் எதனையோ மறைப்பதை மற்றவர்களுக்குப் புட்டுக் காட்டிவிடுமா?

மறைக்க விரும்பும் உண்மையானது, முகம் முழுவதும் அப்பிக் கிடப்பதை எவராலும் மறைக்க முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உண்மை பொய் மாத்திரமல்ல, நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முயல்கிற எல்லா உணர்வுகளையும் உங்கள் விருப்பத்தை மீறி முகம் வெளிப்படுத்திவிடும். சந்தோசம், துக்கம், ஏக்கம், ஏளனம், பொறாமை போன்ற எந்த உணர்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒருவனது உணர்வுகளை அவனது உடல் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வறிஞர்கள் பல வழிகளில் ஆய்வு செய்கின்றனர். நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகள் முதல் நாடகத் தன்மை வாய்ந்த ரி வீ நேரடி ஒலிபரப்புகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற பலவும் அவர்களது ஆய்விற்கு உள்ளாகின்றன.

வார்த்தைகளுக்கு அப்பாலான உடலின் ஒவ்வொரு மொழியையும் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நீங்கள் உரையாடும் போது மட்டுமல்ல எதுவும் பேசாதிருக்கும் போது கூட உங்கள் உடல் பேசும் மொழிகள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

ஒருவர் ஒரு முக்கிய பொய்யைச் சொல்லும்போது அதுவும் மற்றவர்களுக்கு தான் சொல்லும் பொய் பிடிபடாமலிருக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கும்போது அவரது வாய் மொழிக்கும், உடல்மொழிக்கும் இடையே பாரிய இடைவெளி; இருப்பதை அவதானிக்க முடியும் என்கிறார்கள்.

கலிபோனியா சான் பிரன்சிக்கோ அரச பல்கலைக்கழக உளவியலாளரான டேவிட் மட்சுமொடா (David Matsumoto) மற்ற எல்லா அங்கங்களையும் விட அதிகமான செய்திகளை முகம்தான் வெளிப்படுத்துகிறது என்கிறார்.

உதாரணத்திற்கு அவர் பிரபல விளையாட்டு வீரர் Alex Rodriguez வின் தொலைக்காட்சி நேர்முகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'நீங்கள் எப்பொழுதாவது ஆற்றலை ஊக்கப்படுத்தும் பொருட்களை உபயோகித்திருக்கிறீர்களா' என்று கேட்டபோது 'இல்லை' என அவரது வாயிலிருந்து விடை உறுதியாக வந்தது.

ஆனால் அவ்வாறு கூறும்போது அவரது வாய் ஒருபுறம் கோணியதை அவதானிக்க முடிந்ததாம்.

சில மாதங்களின் பின் தான் ஸ்டிரொயிட் மருந்துகளை உட்கொண்டதை அவர் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எததகைய சமூகப் பின்னணியைச் சார்ந்தவராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அடிப்படை உணர்வுகளை ஒரே மாதிரித்தான் முகத்தால் வெளிப்படுத்துகிறார்களாம்.

ஏனெனில் அடிப்படை உணர்வுகள் நாம் கற்றுக் கொண்டவையல்ல, அனுபவத்தால் பெற்றும் கொண்டவையும் அல்ல.

அவை எம்மோடு கூடப் பிறந்தவை.

அடிப்படை உணர்வுகள் ஏழு என்கிறார்கள்.

மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், ஏக்கம், சஞ்சலம், பதற்றம் ஆகியனவே அவை.

உதாரணத்திற்கு மிக சந்தோசமான செய்தியைக் கேட்டவுடன் எமது முகம் விரிந்து மகிழ்ச்சியில் பூரிக்கிறதே. அது தன்னிச்சையாக எமது ஆழ்மனத்திலிருந்து உடனடியாக எழும் உணர்வின் பிரதிபலிப்பாகும் என்கிறார்.

அகத்தின் அழகை முகம் காட்டுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊடாடுபவரிடம் உங்களைப் பற்றிய நல்லெண்ண விதைகளை அது ஊன்றிவிடும்.

மாறாக அகத்தின் அழுக்கை அதுவும் மற்றவரிடம் இருந்து மறைக்க விரும்பும் அழுக்கை உங்கள் முகம் வெளிப்படுத்துவதானது திருடிய பொருளுடன் அகப்படுவது போலானது.

இதனைத் தடுக்க வழி ஏதும் உள்ளதா?

அகத்தை அழுக்கின்றி புனிதமாக வைத்திருப்பதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது.

முடியுமா உங்களால்?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி
ஹாய் நலமா?
தினக்குரல் 28.07.2009






Post Comment

Sunday, October 4, 2009

ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும்

"எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ.' என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.

அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.

அது உண்மைதானா?

இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.

ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.

ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).

எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.

அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.

அல்லது மாறி மாறி வரவும் கூடும்.

உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.

அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.

உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.

இறப்பர் செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது.

ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.

ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.

உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.

ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.

ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,

எக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.

மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு மட்டுமே பயன்படும்.

யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.

ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.

உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise - induced asthma),

தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,

இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,

தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

- டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Post Comment