Saturday, July 18, 2009

 


முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

'சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை' என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

அவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.

எனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.

இருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.

'வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ' எனக் கேட்டேன்.
பரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm

'இல்லை ....' என்றவர், தயக்கத்துடன் '..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே' எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.


நாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.

நோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.

இப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.

இப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.


ஒரு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.

இதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.

மருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.

நோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-
ஹாய் நலமா? தினக்குரல்
Reblog this post [with Zemanta]

Post Comment

17 comments:

மின்னுது மின்னல் said...

கண்டினியுவா 10 மணீ நேரம் உட்காந்து வேலை பார்ப்பதால் பல நேரங்களில் எனக்கும் முதுகு மற்றும் இடுப்பு வலி வருகிறது என்ன செய்யலாம் ?

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

நன்றி,

உங்கள் தகவலுக்கு, நீங்கள் குறிப்பிட்டது போல் அதிக நபர்கள் மருத்துவர்களுக்கே யோசனை வழங்கும் நிலையில்தான் உள்ளனர்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

ஆம் மின்னுது மின்னல்.
எமது முதுகு எலும்புகள் நீண்ட நேரம் நிமிர்ந்து உற்காருவதற்காக அமைந்தவை அல்ல. நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முள்ளெலும்புகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் உட்காருவதம், இடையிடையே சற்று எழுந்து உலாவுவதும் அவசியம். விபரங்களுக்கு நான் May 9,2009 ல் எழுதிய நாரிப்பிடிப்பு வராது தடுத்தல் பதிவைப் பார்க்கவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

உண்மைதான் முத்துக்குமார். இது தகவல் தொழிழ் நுட்பத்தின் காரணமாக சாத்தியமாகியுள்ளது. ஆயினும் அவற்றை வாசிக்கும் பலரும் மேம்போக்காக வாசித்துவிட்டு தவறான, தங்களுக்கு வசதியான கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதைத்தான் எனது அனுபவத்தில் காண முடிகிறது.

சந்ரு said...

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிக நல்லதொரு பதிவு டொக்டர். இன்று இந்த முதுகுவலி அனேக இளைஞர்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் எந்தவித உடற்பயிற்சியுமற்று அமர்ந்திருப்பதுவும் காரணமாக இருக்கலாம்.

Mrs.Faizakader said...

உங்களுக்காக காத்திருக்கும் இந்த விருதை ஏற்றுக்கொள்ளவும்...
http://azurillcrafts.blogspot.com/2009/07/blog-post_20.html

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி சந்ரு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

ஆம். எம்.ரிஷான் ஷெரீப். உழைப்பு முக்கியம்தான். ஆனால் அதற்கு மேல் உடல் நலம் முக்கியம் என்பதைப் பலரும் உணர்ந்து கொள்ளாதிருப்பது கவலைக்குரியதே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மிக்க நன்றி Mrs.Faizakader

சந்ரு said...

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_20.html


ஏற்றுக்கொள்ள‌வும்.

சந்ரு said...

த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_20.html


ஏற்றுக்கொள்ள‌வும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மிக்க நன்றி சந்ரு

Mrs.Faizakader said...

உங்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி Mrs.Faizakader, உங்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நல்லதொரு உபயோகமான பதிவு.

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி துபாய் ராஜா. உங்களுக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்